Saturday, May 11, 2013

சுப்பையாவின் மருமகன்



மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்ததிலிருந்தே சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா மடைதிறந்த வெள்ளமாக, தேவாரமும், திருவாசகமுமாகப் பாடி வந்தார். இடையிடையே கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் வேறு. மரபின் மைந்தன் பாடிய ஒவ்வொரு பாடலும் எனக்கும் தெரியும் என்பதாகக் காட்டிக் கொள்வதற்கு ரொம்பவே சிரமப்பட வேண்டியிருந்தது. சில இடங்களில் கண்மூடி பக்தியில் மூழ்கிக் கிடப்பதான பாவனையில் சமாளித்தேன். உடன் வந்த ‘இசைக்கவி’ ரமணன் அவர்கள் ஒருபடி மேலே போய், மரபின் மைந்தனின் குரலுக்கு வாயசைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தார். சொக்கநாதர் சந்நிதிக்குள் நுழையவும், மரபின் மைந்தனுக்கு முந்திக் கொண்டு, இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி ‘திருச்சிற்றம்பலம்’ என்று உரத்த குரலில் சொல்லிவிட்டு,

’நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க ’

என்று ஆரம்பித்து,

’சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து’

வரைக்கும் நிறுத்தாமல் ஒப்பித்து,

‘நம பார்வதிபதயே, ஹரஹர மஹாதேவா
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’

என்று சம்பிரதாயமாக முடித்து கண் திறந்தேன். ‘இசைக்கவி’ கண்கலங்க என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அத்தனை நேரம் கண் மூடியிருந்ததால், முழு சிவபுராணத்துக்கும் அவர் வாயசைக்க முயன்றாரா என்று பார்க்க முடியவில்லை. ‘அற்புதமா சிவபுராணம் பாடினே, சுகா’. தோளைத் தொட்டுச் சொன்னார். எனக்கு அது மட்டும்தான் தெரியும் என்கிற ரகசியத்தை அவரிடம் சொல்லாமல் தவிர்த்தபடி, ‘எல்லாம் அவன் செயல்’ என்று சொக்கநாதரைக் காட்டினேன். சரியாக மரபின் மைந்தன் சொக்கநாதரை மறைத்தபடி நின்றார்.

வெளியே வந்து காரைத் தேடும் போது, இசைக்கவி சொன்னார்.

‘ஏம்பா, கோயிலுக்கு வந்துட்டு சும்மா போகக் கூடாதுப்பா. ஒரு ஜூஸ் குடிக்கணும்’.

அந்தச் சம்பிரதாயம் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் மரபின் மைந்தன் வேறோர் முடிவில் இருந்தார்.

‘அன்னைக்கே ஒங்கக்கிட்டெ சொன்னேன்ல! பெரியவரப் பாத்துட்டு வந்திருவோம். வீட்லதான் இருக்கா. பேசிட்டென்’ என்றார்.

ஏற்கனவே பெரியவரைப் பற்றிச் சொல்லியிருந்தார். எனக்கு அப்போதே மனசு வேடிக்கையை விட்டு கவனமானது. பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்களின் ஓட்டுனரிடம் கேட்டார், மரபின் மைந்தன். ‘இங்கெருந்து நாகமலை புதுக்கோட்டைக்குப் போகணும்’. ஓட்டுநருக்குத் தெரிந்திருந்தது. அங்கு சென்று ஒவ்வொரு இடமாகத் தேடி ‘சர்வோதயா நகர்’ சென்றடைந்தோம். எங்களைப் பின் தொடர்ந்து ‘தஞ்சை’ செழியனும் தன் காரில் வந்து கொண்டிருந்தார். காரிலிருந்து இறங்கி முகவரியை விசாரிக்கும் போது, எங்களைப் போன்றே அவரும் மரபின் மைந்தனிடம், ‘நெஜம்மாவே அவரத்தான் பாக்கப் போறோமா?’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். கடைசியில் ஒரு மளிகைக்கடைக்கார வெள்ளைமீசை அண்ணாச்சி சொன்னார். ‘வலதுபக்கம் போயி வலதுப்பக்கமே திரும்புங்க. கடைசி ஒத்த வீடு.’

அந்தக் கடைசி ஒத்த வீட்டின் வாசலில் V.O.C.Valeswaran என்று ஆங்கிலத்தில் எழுதிய போர்டு ஒன்று தொங்கியது. நண்பகல் வெயிலும், அமைதியும், புழுக்கமுமான ஒரு சூழலில் மரபின் மைந்தன் அந்த வீட்டின் வாசல் கதவைத் தட்டி, ‘ஐயா’ என்றார்.

‘யாரு?

இந்தா வாரேன்’

என்ற குரலை முதலில் அனுப்பி விட்டு, பின் மெதுவாக கால்களைத் தரையில் தேய்த்தபடி, தளர்ந்த நடையுடன், கிழிசலான பனியன் அணிந்த முதியவர் ஒருவர் கதவைத் திறக்க வந்தார். நன்றாகப் படிய வாரிய சிகை. நெற்றிச் சுருக்கங்களுக்கிடையே திருநீற்றுக் கோடு.

’வணக்கம். முத்தையா வந்திருக்கென்’ என்றார் மரபின் மைந்தன். உதடுகளில் பொதிந்திருந்த நிரந்தரப் புன்சிரிப்புடன்

‘ஆகா, வாங்கய்யா வாங்க’

என்று கதவைத் திறந்தவர், ‘இசைக்கவி’ ரமணன் அவர்களைப் பார்த்து, கண்களை அகலத் திறந்தபடி

‘ஐயா வாங்க. ஒங்கள பொதிகைல பாத்து ரசிச்சிருக்கம்லா’

என்றபடி வணங்கினார். உள்ளே நுழையும் போதே, சத்தமாக

‘ஏட்டி, ஆரு வந்திருக்கா பாரு. பொதிகைல கவித சொல்லி பாட்டா படிப்பாகள்லா. அவுக’ என்றார்.

உள்ளிருந்து பெரியவரின் துணைவியார் வந்து, எங்கள் எல்லோரையும் விட்டு விட்டு , இசைக்கவியை வணங்கி,

‘ஒங்க பாட்டுல்லாம் எங்களுக்குப் புடிக்கும்’ என்றார்.

அனைவரும் கிடைத்த இருக்கைகளில் அமர்ந்த சில நொடிகளுக்கு காரணமேயில்லாமல் ஓர் அமைதி சூழ்ந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, ஏற்கனவே உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் இருந்த ‘இசைக்கவி’ அவர்கள், ஏதேனும் கவி இயற்றிப் பாடிவிடுவாரோ என்று கலக்கத்தில் இருந்தேன். நல்ல வேளையாக அந்த அமைதியை மரபின் மைந்தன் கிழித்தார்.

‘ஐயா, ரெண்டுக்கெட்டான் வேளைல வந்து தொந்தரவு பண்ணிட்டோமோ?’.

மரபின் மைந்தனின் முகத்தை உற்றுப் பார்த்த பெரியவர்,

‘நான் என்னத்த செய்யப் போறேன்? யாருக்காது காயிதம் எளுதுவென். அதத்தவிர வேற சோலி கெடயாது. ஒங்களுக்கே எத்தன காயிதம் போட்டிருக்கென்’ என்றார்.

ஏழெட்டு பேர் அமர முடிகிற அந்த சிறிய ஹாலில் இரண்டு, மூன்று வ.உ.சி புகைப்படங்கள் இருந்தன. அதில் ஒன்றை நான் உற்றுப் பார்க்க,

‘அந்தப் படம் ஒரு வெள்ளைக்கார அதிகாரி குடுத்தது. அத எங்க அண்ணன் ஒடச்சுப் போட்டான். அப்புறம் நான் பந்தோபஸ்து பண்ணி வச்சிருக்கென்’ என்றார், பெரியவர்.

’ஒங்க பேரே வெள்ளக்காரன் பேருதானெ!’ என்றேன். சில நொடிகள் ஏதும் சொல்லாமல் இருந்து விட்டு,

‘அந்த நன்றியெல்லாம் இப்ப உள்ள மனுசாளுக்கிட்டெ நாம எதிர்பார்க்கக் கூடாது’ என்றார்.

சில நொடிகள் ஏதும் சொல்லாமல் இருந்து விட்டு,வ.உ.சி அவர்கள், தான் மீண்டும் வக்கீல் தொழில் செய்வதற்கு உதவிய வாலேஸ் என்ற வெள்ளைக்கார அதிகாரியின் பெயரை, நன்றிக்கடனாக தன் மகனுக்கு வைத்தார் என்னும் செய்தி அறிந்ததுதான். அதைத்தான் பெரியவர் அப்படி சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். சூழலை மாற்ற வேண்டும் என்று விரும்பினாரோ, என்னவோ! இசைக்கவி ரமணன் அவர்களைப் பார்த்து பெரியவர்,

‘எய்யா. டி.வி.ல எத்தனையோ மட்டம் ஒங்க பாட்டக் கேட்டிருக்கொம். இப்ப எங்களுக்காகப் பாடுங்களென்’

என்றார். என் கையில் கேமரா இருப்பதைப் பார்த்தவுடன்

‘நீங்க ஃபோட்டோ எடுக்கப் போறதா இருந்தா, சட்ட போட்டுட்டு வந்திருவென். இதுக்குன்னே ஒரு நல்ல சட்டய பத்திரப்படுத்தி வச்சிருக்கெம்லா’

என்றார். சொன்னபடியே சட்டை போட்டு வந்தார். இசைக்கவி பாடத் தயாராக, உள்ளே சென்ற தன் மனைவியைக் கூப்பிடும் விதமாக,

‘ஏட்டி, ஒன் காப்பிக்கடயக் கொஞ்சம் சாத்திட்டு இங்கன வா. அவாள் பாடப் போறா’ என்றார். ஸ்விட்ச்சைத் தட்டினாற் போல் இசைக்கவி அவர்கள் எங்கு சென்றாலும் தவறாமல் பாடும் ‘அந்த எட்டயப்புரத்துச் சுப்பையா’ என்ற பாடலை சுருதிவிலகாமல் நயமாகப் பாடினார். பாட்டு முடிந்ததும், உள்ளே சென்று ஒரு பொன்னாடையை எடுத்து வந்து இசைக்கவிக்குப் போர்த்தி மரியாதை செய்தார், பெரியவர். இசைக்கவி கண்கலங்கினார். இதற்குள் பெரியவர் வாலேஸ்வரன் அவர்களின் துணைவியார், எல்லோருக்கும் தேநீர் கொண்டு வந்தார்கள். தம்ளரைக் கையில் வாங்கிய மறு கணமே, கண்ணீரைக் கூட துடைக்காமல், ஒரு ஸ்டூலில் இருந்த தட்டில் உள்ள முறுக்கை எடுக்கப் பாய்ந்தார் இசைக்கவி.

‘டீல ஊறப்போட்டு சாப்பிடப் போறேளா?’ கண்சிமிட்டி சிரித்தார், பெரியவர்.

மரபின் மைந்தன் சர்க்கரையைத் தவிர்க்கும் பொருட்டு, தன் தேநீர் தம்ளரிலிருந்து எல்லோருடைய தம்ளரிலும் கொஞ்சம் ஊற்றினார்.

‘என்ன?’ என்றார் பெரியவர்.

‘ஒண்ணுமில்ல. அவாள் பெருமாள் கோயில் தீர்த்தம் மாரி எல்லாருக்கும் வளங்குதா’ என்றேன்.

‘எனக்கு தீர்த்தம் மாரி ஒரு மடக்குதான் என் வீட்டம்மா குடுத்திருக்கா’

கையில் உள்ள தம்ளரைக் காண்பித்தார், பெரியவர். ஒரு நமட்டுச் சிரிப்புடனான சுயஎள்ளலிலேயே வாழ்கிறார் மனிதர் என்பதை அங்கிருந்த ஒவ்வொரு நொடியிலும் உணர முடிந்தது. ஏற்கனவே மரபின் மைந்தன், பெரியவரின் நகைச்சுவை உனர்வைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். கோவைக்கு ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கிறார், பெரியவர் வாலேஸ்வரன். மதியம் மோர்ச்சோறும், இரவுக்கு மிளகாய்ப்பொடி தடவிய இட்லியும் கையோடு கொண்டு வந்திருக்கிறார். இரவு உணவை தங்களுடன் சாப்பிட வற்புறுத்தியிருக்கிறார், மரபின் மைந்தன். உடனே ஃபோனில் மனையிடம் அனுமதி கேட்டாராம், பெரியவர்.

‘ஏட்டி. மத்தியானத்துக்கு நீ கட்டிக் குடுத்த மோர்ச்சோத்த சாப்பிட்டுட்டென், கேட்டியா! ஆனா ராத்திரிக்கு இவங்கல்லாம் அவங்க கூட வெளிய சாப்பிடச் சொல்லுதாங்க’

‘சாப்பிட வேண்டியதானெ? இதுல என்ட்ட கேக்க என்ன இருக்கு?’

‘இல்லட்டி. அவங்க கூட சாப்பிட்டுருதென். ஆனா நீ குடுத்த மொளகாப்பொடி இட்லிய என்ன செய்ய? திருப்பிக் கொண்டு வந்துரவா?’



ஊருக்குத் திரும்பிய பிறகு மரபின் மைந்தன் ஃபோன் பண்ணியிருக்கிறார். ஃபோனை வைக்கும் போது பெரியவரிடம் மரபின் மைந்தன் சொல்லியிருக்கிறார்.

‘அம்மாக்கிட்டெ நான் ரொம்ப விசாரிச்சதாச் சொல்லுங்க’.

‘இப்ப அவ தூங்கிக்கிட்டிருக்கா. இப்பவே எளுப்பி நீங்க விசாரிச்சதாச் சொல்லவா? இல்ல அவ எந்திரிச்சதுக்கப்புறம் சொல்லவா?’

இவையெல்லாம் நினைவுக்கு வர, பெரியவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் சிரித்தபடியே அமர்ந்திருந்தேன்.

‘ஒங்க அப்பாவும் இப்படித்தான் ஹாஸ்யமா பேசிக்கிட்டு இருப்பாங்களோ?’ இசைக்கவி கேட்டார். அதற்கு பெரியவர் வாலேஸ்வரன் சொன்ன பதில்.

‘அவாள் அப்படி இருந்திருக்க வாய்ப்பில்ல’. சற்றுநேர அமைதிக்குப் பிறகு சொன்னார். ‘கப்பல் ஓட்டுனதுல எங்க அப்பாக்கு நஷ்டம்தான். ஆனா சொத்துல்லாம் போனது, தொழிற்சங்கத்துலதான்’.

‘ஒங்க அப்பாவோட புஸ்தகத்தையெல்லாம் அரசுடைமை ஆக்குனாங்களே!’ மரபின் மைந்தன் கேட்டார்.

‘அத டிஸ்ஹானர் பண்ணி திருப்பி அனுப்பிட்டாங்கய்யா’ என்றார் பெரியவர்.

‘ஏன்?’ என்ற கேள்விக்கு சிரித்தபடியே, ‘வேற ஒன்ணுமில்ல. அந்த அதிகாரியப் பாத்து நான் சலாம் போடல. அவ்வளவுதான்’ என்றவர், ‘அப்ப மூவாயிர ரூவா பென்ஷன்ல குடும்பம் நடத்த வேண்டிய சூழல். அதான் அப்பிடியே விட்டுட்டென் இப்பம்னா கேஸு கீஸு போட்டிருப்பென். பிள்ளேள்லாம் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்கல்லா ’ என்றார். மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தோம். பெரியவர் தொழிலாளர் நலத்துறை அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றார், மரபின் மைந்தன்.

கிளம்பும் நேரம் வந்தது. எல்லோரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அந்த முதிய தம்பதியினரின் கால்களில் விழுந்து வணங்கினோம். ஆசீர்வாதம் வாங்க சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணிய இசைக்கவி கூடுதலாக ஒரு சில நொடிகள் கீழே கிடந்தார். ‘எளுப்பி விடணுமோ?’ என்றார் பெரியவர். வெடித்து சிரித்தபடி கிளம்பினோம்.



‘ஏட்டி. இவாளுக்கெல்லாம் மத்தியானம் சாப்பாட்ட போட்டு பயங்காட்ட வேண்டாமா? இப்பிடி தப்பிச்சு போக விடுதியெ!’ மனைவியைப் பார்த்துச் சிரித்தபடிக் கேட்டார்.

வாசல் வரைக்கும் வழியனுப்ப வந்தவர், இசைக்கவி ரமணன் அவர்களிடம், ‘எய்யா. அந்த எட்டயப்புரத்துச் சுப்பையான்னு படிச்சேளே, சுப்பையா மாமாவப் பத்தி! கண்ணீர் வந்துட்டு. . . . எங்க குடும்பமாது வறுமைல கஷ்டப்பட்டுச்சு. ஆனா சுப்பையா மாமா குடும்பம் பட்டினில சங்கடப்பட்டுது . இருக்கும் போது சோறு போடாம இப்ப பாரதி பாரதிங்கானுவொ, சவத்துப் பயவுள்ளய! ஆத்தரமா வருதுய்யா’என்றார், எண்பது வயதைக் கடந்த பெரியவர் வ.உ. சி. வாலேஸ்வரன்.

Sunday, April 28, 2013

விருந்தோம்பல்


Courtesy: The Hindu

ஒங்களால எங்க வீட்ல நடக்கக் கூடாததல்லாம் நடந்துக்கிட்டிருக்குங்க’. பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் தொலைபேசியில் சொன்னார். ’ஐயையோ! என்ன ஸார் ஆச்சு?’ பதறினேன். ‘பின்னே? நீங்க எங்க வீட்டுக்கு சாப்பிட வாரிய. அதான் அதிசயமா எங்க வீட்ல சைவ சமையல் நடந்துக்கிட்டிருக்கு. நானே போயி காய்கறில்லாம் வாங்கிட்டு வந்தேன்’ என்றார். மிகச் சமீபத்துப் பழக்கம். ஆனால் பல வருடங்களாக நெருங்கிப் பழகியது போன்ற உணர்வு. கலப்படமில்லாத அன்பைப் பொழியும் பேராசிரியர் எனக்கு ஃபோன் பண்ணுகிறார் என்றால், அவர் காரில் வத்தலகுண்டு பட்டிமன்றத்துக்கோ, நாகர்கோயிலில் ஏதேனும் சொற்பொழிவுக்கோ, இல்லை ஏதேனும் திரைப்படப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காகவோ சென்று கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். ஆங்காங்கே வண்டிகள் சர் சர்ரென்று செல்லும் சத்தம் கேட்கும். இடையில் யாராவது வந்து பேச்சு கொடுப்பார்கள்.

‘ஐயா, நீங்கதானெ ஜெயா டி.வில ஜோசியம் சொல்றது?’

இதற்கிடையில் என்னிடமும் பேசுவார்.

பேராசிரியரிடம் எனக்குப் பிடித்த பண்பே, அவரது சுயஎள்ளல்தான். தன்னுடைய தொழில்நுட்ப அறிவு குறித்து அவருக்கும், எனக்குமான சம்பாஷணை, எப்போதுமே வேடிக்கைதான். எப்போது குறுஞ்செய்தி அனுப்பினாலும், உடனே ஃபோன் பண்ணுவார். ஆனால் தனக்கு வந்த குறுஞ்செய்தியைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் வைத்து விடுவார். ’ஏன் ஸார் எஸ் எம் எஸ்ஸுக்குப் போயி இப்படி பதட்டமடைறீங்களே!’ என்று கேட்டால், இப்படி சொல்லுவார். ‘சுகா, என்னதான் இப்ப நகர வாழ்க்கைக்குள்ள வந்துட்டாலும், நான்லாம் இன்னும் மனதளவுல கிராமத்தான்தான். சிறு வயசுல நம்ம ஊர்கள்லல்லாம் தந்தி வந்துட்டாலெ, ஊரே கூடி அழுகிற கலாச்சாரத்துல வளந்தவன். சட்டுன்னு மாறிட முடியுங்களா? ஒருமுற நான் வீட்ல இல்லாதபோது எனக்கு தந்தி வந்திருக்கு. தந்திய வாங்கி வச்சுக்கிட்டு ஊரே என் வீட்டுவாசல்ல காத்து நிக்குது. தெருமுக்குல என் பைக் திரும்பவும், ‘கே’ன்னு ஒரே கதறல். ஒருத்தரு என் பைக்கை வாங்கி ஸ்டாண்ட் போடறார். இன்னொருத்தர், என் கையப் புடிச்சு என் வீட்டுக்கு எனக்கே வழிகாட்டிக் கூட்டிட்டுப் போறாரு. வேற ஒரு அம்மா, வீட்டுக்குள்ள போயி தண்ணி கொண்டு வந்து குடுத்து, ‘மொதல்ல கொஞ்சம் தன்ணி குடிச்சுக்கப்பா’ங்குது. என் வீட்டுக்கு வந்து போற சொந்தக்காரங்க யாராயிருக்கும்னு அவங்களே ஆளாளுக்கு கற்பன பண்ணிக்கிட்டு, ‘தைரியமா இரு’ன்னு கண்ணீரோட, என் தோளத் தட்டிக் குடுக்க்றாங்க. கடைசில தந்தியப் பிரிச்சுப் பாத்தா, ‘போடிநாயக்கனூர் ப்ரோக்ராம் போஸ்ட்போண்ட்’னு வந்திருந்தது. ஆக எங்களப் பொருத்தவரைக்கும் இந்த எஸ் எம் எஸ்ஸையெல்லாம் நாங்க அந்தக் காலத்துத் தந்தியாத்தான் பாவிப்போம்’.

குறுஞ்செய்திக்கே இப்படியென்றால், மின்னஞ்சலுக்கு அவர் அடைகிற பதற்றம், அவர் வகுப்பில் அமர்ந்திருக்கும் மாணவர்களின் பதற்றத்தை விட அதிகம். ஒற்றை மின்னஞ்சல் மூலம், பேராசிரியரை எந்த ஊரிலிருந்தும் நேரிலேயே வரவழைத்து விடலாம். இத்தனைக்கும் ‘உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்’ என்கிற குறுஞ்செய்தி போதுமானது. மின்னஞ்சலைப் பார்த்திருக்கவே மாட்டார்.

‘அட! அத ஏன் கேக்குறீங்க சுகா! கமல் இப்படித்தான் அடிக்கடி, ‘பேராசிரியர் தொழில்நுட்ப அறிவை வளத்துக்குங்கம்பாரு. ஒருதடவ அந்த நம்பர எனக்கு எஸ் எம் எஸ் அனுப்புங்கன்னு சொல்லிட்டு ஃபோன வச்சுட்டாரு. அப்புறம் நான் தடவி தடவி, கமலத் தவிர மத்த எல்லாருக்கும் அவரு கேட்ட நம்பர அனுப்பி வச்சு . . . கடைசியா அவருக்கும் ஒரு ப்ளாங்க் எஸ் எம் எஸ் அனுப்பினேன்னா பாத்துக்குங்களேன். இதுக்கே சாயங்காலம் வரைக்கும் ஆயிப் போச்சுங்க’.

தொலைக்காட்சிகளில், இணையத்தில் கேட்டிருக்கிறேனென்றாலும் பேராசிரியரின் பேச்சை நான் முதலில் நேரில் கேட்டது, சென்னையில் அவர் ‘நெடுநல்வாடை’ பற்றிப் பேசும் போதுதான். வெறும் துணுக்குத் தோரணங்களாக பட்டி மன்றம் பேசுபவர்தானே என்று நினைப்பவர்களை வியக்க வைக்கும் பேச்சு, அது. பழந்தமிழில் பயிற்சி என்பதில் கூட ஆச்சரியமில்லை. நவீன இலக்கியத்திலும் அவருக்கிருக்கும் ஆர்வம் அளவிட முடியாதது. அநேகமாக நவீன இலக்கிய உலகில் எழுதிக் கொண்டிருக்கும் எல்லோருடைய படைப்பையும் தேடிப் பிடித்துப் படித்து விடுகிறார். ‘எப்படி ஸார் எல்லாத்தையும் படிச்சுடறீங்க?’ என்று கேட்டால், ‘முன்னாடில்லாம் பேசறதுக்காகப் படிச்சேன். இப்பல்லாம் படிக்கிறதுக்காகப் பேசறேன்’ என்பதுதான் அவருடைய பதிலாக இருக்கிறது. சமீபகாலமாக நான் படிக்காமல் விட்டுப் போன புத்தகங்களைப் பற்றி பேராசிரியரிடமே கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்.

நான் பேச ஆரம்பிச்ச புதுசுல எங்கப்பா முதல்நாளே கூப்பிட்டு, அது படிச்சியா, இது படிச்சியான்னு கேப்பாருங்க. படிக்கிற பழக்கம் அவர்கிட்டேருந்து வந்ததுதான். அவரு எறந்து, நான் கொள்ளி வைக்கும் போது, ஒரு நூலகத்துக்குக் கொள்ளி வைக்கிற உணர்வுதாங்க எனக்கிருந்தது.’

சிரிக்கச் சிரிக்கப் பேசுகிற பேராசிரியர், சாதாரணமாக இப்படிச் சொல்லி அழ வைப்பார். உடனே நம் மூடை மாற்றும் பேச்சு, அவருடையது. ‘நான் என்னவா வரக்கூடாதுன்னு அவர் நெனைச்சாரோ, அப்படித்தானே வந்தேன்! அதாங்க, தமிழாசிரியரா ஆயிட்டேன்ல! ஏன்னா எங்கப்பாவும் ஒரு தமிழாசிரியர்’.

மதுரையில் நான் தங்கியிருந்த விடுதியிலேதான் சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா மற்றும் பொதிகை டி.வி. புகழ் ‘இசைக்கவி’ ரமணன் அவர்களும் தங்கியிருந்தனர். மாலையில் விடுதிக்கு எதிரே இருக்கும் ராஜா முத்தையா மன்றத்தில் பேராசிரியரின் தலைமையில் ‘கண்ணதாசன் பாடல்கள்’ குறித்த பட்டி மன்றத்தில் பேச வந்திருந்தார்கள். ‘வேற ஹோட்டல்னா கூட நீங்க தப்பிச்சிரலாம். இப்ப தப்பிக்க வளியேயில்ல. எங்க பேச்ச கேட்டுத்தான் தீரணூம்’. மரபின் மைந்தன் மிரட்டினார். ‘ஸார் பாடுறதா சொன்னாங்களே! அவாள் பாடுறதும் பேச்சுலதான் வருமோ?’ என்று ‘இசைக்கவி’ ரமணனைக் காண்பித்துக் கேட்டேன். ‘சுகா, இது உங்க கையில்ல. காலு. தயவு செய்து முன்வரிசைல உக்காந்து சிரிச்சு கலாட்டா பண்ணிடாதீங்க, ப்ளீஸ்’ என்றார், இசைக்கவி. ‘அப்ப நீங்க நெஜம்மாவே நீங்க பாட ட்ரை பண்ணுவீங்களா?’ என்றேன். ’முத்தையா, கண்டிப்பா இந்த நிகழ்ச்சில நான் கலந்துக்கிடத்தான் வேணுமா?’ மரபின் மைந்தனிடம் கேட்டார், இசைக்கவி.

பேராசிரியர் காரை அனுப்பி வைத்து ஃபோனும் பண்ணினார். ‘சுகா, நீங்க வர்றது சந்தோஷம்னா, ஐயா வர்றது கௌரவம். அவர நல்லபடியா கூட்டிட்டு வாங்க’ என்றார். ‘ஐயா’ என்று பேராசிரியர் மரியாதையுடன் சொன்னது, வண்ணதாசன் அண்ணாச்சியை. அண்ணாச்சி அன்று காலை திருநெல்வேலியிலிருந்து கிளம்பி மதுரை வந்திருந்தார்கள்.

‘அமுதகம்’ என்று பெயரிட்ட பேராசிரியர் வீட்டு வாசலில் பேராசிரியரும், அவர் துணைவியாரும் நின்று எங்களை வரவேற்றனர். எங்களுடன் தஞ்சை செழியனும், அவர் நண்பரும் வந்திருந்தார்கள். முதலில் பேராசிரியர் தன் வீட்டு நூலகத்துக்கு அழைத்துச் சென்றார். கீழே ஒன்று, மாடியில் ஒன்று என இரண்டு நூலகங்கள். பழைய, புதிய புத்தகங்கள் ஒவ்வொன்றும், நம்பர் போட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்னாலுள்ளவையோ என சந்தேகிக்கும் வண்ணம், பார்க்கும் போதே தும்மலை வரவழைத்தன, சில அரதப்பழசான புத்தகங்கள். வண்ணதாசன் அண்ணாச்சி ஒரு பழைய புத்தகத்தை எடுத்து பூப்போலப் புரட்டினார். அடுத்தடுத்தப் பக்கங்களை அவர் புரட்டும் போது, எந்தப் பக்கத்திலிருந்தாவது ஏதேனும் பூதம் குதித்து, எங்களைச் சுற்றி வந்து காலைக் கடித்துவிடுமோ என்று கலக்கமாக இருந்தது. நல்லவேளையாக அதற்குள் சாப்பிட அழைத்தார்கள்.

டைனிங் டேபிளில் இலை போட்டு, அநேகமாக இதுநாள் வரை நான் கேள்விப்பட்ட அத்தனை காய்கறிகளும் வரிசையாக அணிவகுத்தன. அவைபோக நவதானியங்கள், சாம்பார், ரசம், திருநவேலி வத்தக்குழம்பு, நாகர்கோயில்காரர்களுக்குப் போட்டியாக ஒன்றுக்கு இரண்டு பாயாசம், அப்பளம் என விருந்து அமர்க்களப்பட்டது. இரண்டாவது பாயசமான இளநீர்ப் பாயாசத்தை விருந்துக்குப் பின் அருந்துவதாக ஏற்பாடு. எங்கே பேராசிரியரும், அவர் துணைவியாரும் அதைக் கொடுக்க மறந்துவிடுவார்களோ என்கிற பதற்றத்தில் அவசரவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார், ‘இசைக்கவி’. ‘ஸார்! சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம் இளநீர்ப் பாயாசம் தர்றதா சொன்னீங்க. மறந்துராதீங்க’. நொடிக்கொருதரம் நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தார். ‘இளநீ . . . .ர்ப் . . . பாயாசமே . . . . உனை அருந்தினால் . . . பறக்கும் என் ஆயாச . . . மே’ என்று அவர் பாடத்தான் இல்லை. முழு விருந்தையும் பேராசிரியரும், அவர் துணைவியாரும் நின்று பரிமாறினார்கள். எனக்கு என் பெற்றோரின் விருந்தோம்பல் நினைவுக்கு வந்து கண்ணீர் துளிர்த்தது.

விருந்து முடிந்து, இளநீர்ப் பாயாசம் வந்து இசைக்கவியை ஆசுவாசப்படுத்தியது. ‘பாயாசம், ஆயாசம்’ பாட்டு பிறக்கும் முன்னே மரித்து, எங்களை ஆசுவாசப்படுத்தியது. பேராசிரியர் சாப்பிட்டு விட்டு வந்து, தாம்பூலம் தரிக்க ஏற்பாடு செய்தார். தான் எழுதிய புத்தகங்களை எடுத்து வந்து கையெழுத்திட்டு எங்களுக்குக் கொடுத்தார். எனக்குக் கொடுக்கும் போது மட்டும், அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. காரணம், ஏற்கனவே எனது ’தாயார் சன்னதி’ புத்தகத்தை அவருக்கு நான் கொடுத்திருந்தேன். பழிக்குப் பழி வாங்கிவிட்ட திருப்தி, பேராசிரியரின் முகத்தில் தெரிந்தது. ‘இனி நீங்க தப்பிக்க முடியாது’ என்றார். ‘ஏன்? அதான் குடுத்துட்டீங்களே! எப்படியும் வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிருவேன். நம்புங்க’ என்றேன். ‘அதெல்லாம் அவ்வளவு லேசுல தட்டிக்களிச்சுர முடியாது. ரெண்டு நாளைக்கு ஒருக்க ஃபோன் பண்ணி அந்தந்த புஸ்தகத்துல இருந்து கேள்வி கேப்பேன்’ என்றார், பேராசிரியர். நாக்கில் மிச்சமிருந்த இளநீர்ப் பாயாசத்தின் சுவை மனதுக்குள் பரவுவதற்கு முன்பே தடுத்தார்.



மாலையில் ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த ‘கண்ணதாசன் சிறந்து விளங்கியது அவரது தனிப்பாடலிலா, திரைப்பாடலிலா’ என்கிற பட்டிமன்றத்துக்குச் சென்றோம். அரங்கம் நிரம்பி வழிந்தது. கவிஞர் சக்தி ஜோதி வந்திருந்தார். வணக்கம் சொன்னார். அவரை அதற்கு முன்பு நாற்பத்திரண்டு புகைப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன். முன்வரிசையில் வண்ணதாசன் அண்ணாச்சியும், நானும் சென்று அமர்ந்தோம். மேடையில் பட்டிமன்றத்து நடுவராக வீற்றிருந்த பேராசிரியர், வண்ணதாசன் அண்ணாச்சியையும், என்னையும் வரவேற்று எங்களைப் பற்றி ஒருசில வார்த்தைகள் பேசினார். முதலில் வண்ணதாசன் அண்ணாச்சி எழுந்து நின்று கைத்தட்டல்களுக்கிடையே அரங்கில் அமர்ந்திருந்தவர்களை வணங்கினார். அடுத்து நான். ‘மூங்கில் மூச்சு, தாயார் சன்னதியோடு என் தகப்பனாரின் பெயரையும் சேர்த்து பேராசிரியர் சொல்ல, அரங்கமே அதிர, நடுங்கும் கால்களுடன் எழுந்து நின்று அனைவரையும் வணங்கி, இருக்கையில் ’சொத்’தென்று சரிந்தேன்.

கண்ணதாசனின் தனிப்பாடல்கள் பற்றிப் பேசிய சகோதரர் ‘மரபின் மைந்தன்’ முத்தையா எந்தவிதக் குறிப்புமில்லாமல் அருமையாகப் பேசினார். கவிஞர் வைரமுத்து சொன்னாராம். ‘என்னிடம் இருக்கும் அத்தனை புத்தகங்களும் அழிந்து போனாலும் எனக்குக் கவலையில்லை. என்னுடன் முத்தையா இருக்கிறார்’ என்று. பொதுவாக வைரமுத்து அவர்களின் புகழ்ச்சியில் அதீதம் இருக்கும் என்பது எல்லோருக்கும் (அவருக்குமே) தெரிந்த ஒன்று. ஆனால் ‘மரபின் மைந்தன்’ விஷயத்தில் அது முற்றிலும் உண்மை. நண்பர் ஜெயமோகனின் ‘கொற்றவை’ வெளிவந்த வெகுசில நாட்களிலேயே அதைப் படித்து, ஜெயமோகனிடமே அதைப் பற்றி விவாதித்து அதிர்ச்சிக்குள்ளாக்கினவர், அவர். ஆக, கொற்றவை வாசகர் ஒருவரை எனக்குத் தெரியும். (நான் இப்படியெல்லாம் பேசுவதாலேயே கொற்றவை புத்தகத்தை ‘நண்பன்’(?) என்று எழுதி, எனக்குப் பரிசளித்தார், நண்பர் ஜெயமோகன்). அடுத்து ‘இசைக்கவி’ பேச வந்து, பாடினார். மைக் முன் வரும்போதே, முன்வரிசையில் இருந்த என்னைப் பார்த்து, ‘அமைதியா உக்காந்திரு. கொன்னிடுவேன்’ என்பது போல சைகை காட்டி, மிரட்டினார். அவரது மிரட்டல் அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்தது. ஆனால் அவரது பாட்டு சிரிப்பை விரட்டியது. மிகக் குறைவான நேரமே எடுத்துக் கொண்டார், ‘இசைக்கவி’. அடுத்தடுத்து இரண்டு பெண்கள். அவர்கள் பங்குக்கு ஒருவர் பாட, மற்றொருவர் முயன்றார். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு சீட்டு வந்தது. ‘இசைக்கவி’ மேலும் பாட வேண்டும் என்று அதில் எழுதியிருந்ததாக பேராசிரியர் அறிவித்தார். ‘இசைக்கவி’ வந்து பாடினார். இந்த முறையும் என்னை எச்சரிக்க அவர் தவறவில்லை. ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்கிற பாடலை தன் குரலில் அழகாகப் பாடினார். நிகழ்ச்சி முடியும் வரைக்கும் தேடினேன். சீட்டு எழுதிக் கொடுத்தவர் கடைசி வரைக்கும் கண்ணில் தட்டுப் படவேயில்லை.

முடிவுரையில் வழக்கம் போல பேராசிரியரின் பேச்சில் சுவைக்குக் குறைவில்லை. நிகழ்ச்சி முடிந்து, இரவு உணவுக்குப் பின்னர் எங்கள் அறைக்கு வந்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு பேராசிரியர் கிளம்பிச் சென்றார். பிறகு பதினோரு மணிக்கு மேல் அதிகாலை நான்கு மணிவரைக்கும் வண்ணதாசன் அண்ணாச்சியும், நானும் பேசிக் கொண்டிருந்தோம். திருநவேலி பற்றிய எங்கள் இருவருக்குமான பார்வைகள், ஆசைகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், சந்தோஷங்கள் என நீண்டது, எங்கள் பேச்சு. அண்ணாச்சியின் ஒவ்வொரு கதையாக நினைவுபடுத்திச் சொல்லிக் கொண்டேயிருந்தேன். அவரது ‘போய்க் கொண்டிருப்பவள்’ கதையைப் பற்றிப் பேசியபோது, ‘நடுராத்திரி ரெண்டு மணிக்கு ‘போய்க்கொண்டிருப்பவள்’ பத்தி ஒரு மனுஷன் பேசறதக் கேக்கும் போது இந்தாக்ல செத்துப் போயிரலாம் போல இருக்கெய்யா’ என்றார். மறக்க முடியாத அந்த இரவில், அந்த மதுரை விடுதியறையில் எங்களுக்காக அன்று இரவு முழுவதும் தாமிரவரணி ஓடிக் கொண்டேயிருந்தது.



சென்னைக்கு நான் வந்த பிறகு பேராசிரியர் பேசும் போது இதைச் சொன்னேன். ‘நல்ல வேள சுகா. நான்லாம் கெளம்பிப் போனேன்! நானும் எடஞ்சலுக்கு உக்காந்தேயிருந்தேன்னு வைங்க. அவுகளும், நீங்களும் இப்பிடில்லாம் பேசிக்கிட்டிருந்திருப்பீங்களா!’ என்றார். பேராசிரியரின் உயர்ந்த குணங்களில் ஒன்று இது. மதுரை நிகழ்ச்சிக்குப் பிறகு பேராசிரியரை இன்னும் நேரில் சந்திக்கவில்லை. ஆனால் அவ்வப்போது ஃபோனில் பேசுவோம்.

‘என்ன சுகா! எங்கெ இருக்கிய?’

‘நான் இருக்கிறது இருக்கட்டும். நீங்க மதுரல இல்லியே?’

‘அதெப்படி? மதுரைல இருந்து ஃபோன் பண்ணினாத்தான் நீங்க எடுக்க மாட்டியளே! இப்ப கோவைல இருக்கென். விஜயா பதிப்பகத்துல நெறய புஸ்தகங்க வாங்கிட்டு வந்தேன். ராத்திரிக்கு ஆச்சு.’

பேராசிரியரின் பிசியான சுற்றுப்பயணங்களில் அவ்வப்போது மதுரையும் எட்டிப் பார்க்கும். போனால் போகிறதென்று அவர் பணிபுரியும் தியாகராஜர் கல்லூரிக்கும் அவ்வப்போது சென்று வருகிறார். மூன்று நாட்கள் அவர் தொடர்ச்சியாக கல்லூரிக்குச் சென்றால் கல்லூரி நிர்வாகமே அவரை ஏதாவது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வெளியூருக்கு அனுப்பி விடுகிறது. மாணவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதை பேராசிரியரிடமே பலமுறை சொல்லியிருக்கிறேன். அடக்க முடியாமல் சிரித்து விழுந்திருக்கிறார். அவரது நண்பர்கள், செல்லுகின்ற இடத்தில் அவர் சந்திக்கும் பெரிய மனிதர்கள் அனைவரிடமும் என்னைப் பேசச் செய்வார். அப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்கிற அவசியமே அவருக்கில்லை. ஆனாலும் அவரது பரந்த மனமானது, தனக்குத் தெரிந்த எல்லா மனிதர்களும், தன் நண்பர்களுக்கும், தனக்குப் பிரியமானவர்களுக்கும் தெரிய வேண்டும் என்று நினைக்கிறது.

சென்ற மாதத்தில் ஒருநாள் ஃபோன் பண்ணினார். வழக்கம் போல நான் ஃபோனை எடுத்த எடுப்பிலேயே, ‘ஸார், நீங்க மதுரைல இல்லியே? ஆமான்னீங்கன்னா ஃபோனை வச்சிருவென்’ என்றேன். ‘இல்ல சுகா. சென்னைக்கு வந்திருக்கென். கொஞ்சம் இருங்க. உங்கக்கிட்டெ ஒருத்தர் பேசணுங்கறாரு’.

‘வணக்கம். எப்பிடி இருக்கீங்க. நான் கமலஹாசன் பேசறேன்’ என்றது எதிர்முனைக்குரல்.

Tuesday, April 16, 2013

திருநவேலியும், திருநெல்வேலியும் . . .



கி.ரா. பாட்டையாவின் ‘கதவு’ சிறுகதையை குறும்படமாக யாரோ எடுத்திருக்கிறார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் எடுத்திருப்பது, பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியின் விஷுவல் கம்யூனிக்கேஷன் மாணவர்கள் என்னும் தகவலை எனக்குச் சொன்னவர், கவிஞர் க்ருஷி. அதுவும் ‘கதவு’ குறும்படத்தின் திரையிடலுக்காக நான் திருநவேலிக்கு வர வேண்டும் என்றார். ‘குறும்படம் எடுத்த இயக்குனர், நீங்க கண்டிப்பா வரணும்னு பிரியப்படுதாரு. வாரேளா?’ என்று க்ருஷி ஸார்வாள் கேட்டபோது, உடனே வருகிறேன் என்று சொல்ல முடியவில்லை. சென்னையில் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருக்கும் வேலைகளுக்கிடையே திருநவேலிக்குப் போய்வர, மனம் விரும்பினாலும் சூழல் ஒத்துழைக்கவில்லை. ‘யோசிச்சு சொல்லுங்க. ஆனா பாஸிட்டிவா சொல்லுங்க’ என்றார் ஸார்வாள். அடுத்தடுத்து இரண்டு, மூன்று அழைப்புகள், குறுஞ்செய்திகள். கிடப்பது கிடக்கட்டும், திருநவேலிக்குச் சென்று வரும் வாய்ப்பைத் தவற விட வேண்டாம் என்று கிளம்பிவிட்டேன்.

சென்னைக்கு வந்துவிட்ட இருபது ஆண்டுகளில் எப்போது திருநவேலிக்குக் கிளம்பினாலும், பயணத்துக்கு முந்தைய நாளிலிருந்தே திருநவேலி கண்ணுக்குப் புலப்படத் துவங்கி விடும். எக்மோருக்குள் நுழையும் போது, நெல்லை எக்ஸ்பிரஸ்ஸோ, கன்னியாகுமரியோ, அனந்தபுரியோ கண்ணில் பட்டால் பாதி திருநவேலியைப் பார்த்த மாதிரிதான். ஏறி இடம் பார்த்து, கால்களுக்கடியில் பெட்டியைத் தள்ளி விட்டு, எதிரெதிர் மனிதர்களின் முகம் பார்த்து, லேசாகச் சிரித்து வண்டி கிளம்பும் போது,

‘வே மாப்ளே! ஒமக்கு அப்பர்ல சீட்டு. தவளும் கிருஷ்ணர் மாதிரி தவள்ந்து போரும்’.

‘எல, கணேசன்ட்ட இட்லி பொட்டணத்த எங்கெ வச்சான்னு கேளு. இந்தப் பைல புளியோதரல்லா இருக்கு. சவம் ராத்திரி பூரா எதுக்களிச்சுக்கிட்டேல்லா கெடக்கும்!’

‘ஏளா, மண்ணெண்ணெய ஒளிச்சு வையி. ட்டி.ட்டி.ஆர் வாராரு’.

தாம்பரம் தாண்டுவதற்குள் ‘திருநவேலி பாஷை’ பேசும் மனிதர்கள், திருநவேலியை ரயிலுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள்.

முன்பெல்லாம் தெரிந்த ‘திருநவேலி முகங்கள்’ ஒன்றிரண்டாவது கண்ணுக்குத் தென்படும். இப்போது சமீபகாலமாக அப்படி நடப்பதில்லை. அடுத்தடுத்த தலைமுறையினரின் முகங்கள் நான் அறியாத காரணமா, இல்லை எனக்குத் தெரிந்த, ஆனால் நான் பழகியேயிராத முந்தைய பழைய மனிதர்கள் இப்போதெல்லாம் பயணம் செய்வதில்லையா, அறியேன். திருநவேலி ரயில்வே ஸ்டேஷனில் போய் இறங்கியபோது, ரயிலுக்குள் இருந்த திருநவேலியைப் பார்க்க முடியவில்லை. வேறு ஏதோ ஓர் ஊரில் போய் இறங்கிய உணர்வுதான் ஏற்பட்டது. அதனாலேயே, திருநவேலிக்குச் செல்வதாக இருந்தால் யாருக்குச் சொல்கிறேனோ, இல்லையோ! மீனாட்சிக்குச் சொல்ல மறப்பதில்லை. நான் அறிந்த திருநவேலிக்காரர்களில் இன்னும் பழைய திருநவேலியை விடாமல் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களில் மீனாட்சிசுந்தரமும் ஒருவன். தாமிரவரணிக் குளியல், நெல்லையப்பர் கோயில் தரிசனம், இருட்டுக்கடை அல்வா, துணி எடுத்துத் தைத்த டெரிக்காட்டன் சட்டை, பேண்ட், கூடுமானவரை வேட்டி சட்டை(கோ-ஆப்டெக்ஸ்). தோற்றத்திலும் அவனை ஒத்திருக்கும் 30 கிலோமீட்டரை எப்போதுமே தாண்டாத டி.வி.எஸ் 50, வாரத்துக்கு இருமுறை சவரத்தை சந்திக்கும் இளநரை முகம் என மீனாட்சி எழுபது, எண்பதுகளின் திருநவேலிச் சித்திரத்தைக் கண்முன் நடமாட விடுபவன்.




‘எல! சாய்ங்காலம் ஜானகிராம் ஹோட்டல்ல ஒரு நிகள்ச்சி. நாலரைக்குல்லாம் வந்திரு.’

‘எலக்கியமா, சித்தப்பா?’

‘ம்ம்ம். கிட்டத்தட்ட அப்படித்தான். ஏன் கேக்கெ?’

‘சரி. அப்ப ராத்திரி சாப்பாட்ட சோலிய முடிச்சிருவாங்க. வீட்ல சொல்லிட்டு வந்திருதென்’.

‘கதவு’ குறும்படத் திரையிடலுக்கான அழைப்பிதழில் ‘கரிசல்’ எழுத்தாளர்கள் அனைவரின் பெயர்களும் இருந்தன. அநேகமாக அனைவரும் வந்திருந்தனர். வண்ணதாசன் அண்ணாச்சி, நீண்ட நாட்களாக நான் சந்திக்க விரும்பிய தமிழ்ச்செல்வன் அண்ணாச்சி, கவிஞர் தேவதச்சன், எழுத்தாளர்கள் உதயசங்கர், சோ.தர்மன், தாங்க முடியா கொடுங்கவிதை ஒன்றை படித்த நிரந்தர முகபாவனையுடனான பண்பாட்டு ஆய்வாளர் ஐயா தொ.பரமசிவன், பிரியத்துக்குரிய தோழர் நாறும்பூநாதன் என ஒரே எழுத்தாளர் கூட்டம். தோழர் நாறும்பூநாதன் என்னருகில் அமர்ந்து மெதுவான குரலில், வழக்கமாக அவர் சொல்லும் செய்தியைச் சொன்னார். ‘இன்னிக்கு பாத்து எனக்கு வேற ஒரு நிகள்ச்சி இருக்கு, பாத்துக்கிடுங்க. நான் போயிட்டு ராத்திரி எப்படியாது வந்திருதென்’.



(தோழர் நாறும்பூநாதனுடன்)

குறும்படத்தைத் துவக்கும் முன், என்னை அறிமுக உரை நிகழ்த்தச் சொன்னார்கள். ‘மூத்த படைப்பாளி கி.ரா பாட்டையாவின் சிறுகதை ஒன்றை குறும்படமாக எடுத்திருப்பதற்காக இந்த குறும்படத்தின் தயாரிப்பாளரை முதலில் பாராட்டுகிறேன்’ என்று துவங்கி ‘ஒரு படைப்பாளியை அவர் வாழும் காலத்திலேயே கௌரவிப்பது முக்கியமானது. உயிரோடு இருக்கும் போது மதிக்காம, செத்துப் போன சுப்பையாவுக்கு சிலை வைத்து நாம கும்பிடறத இனிமேலாவது செய்ய வேண்டாம்’ என்றேன். சுப்பிரமணிய பாரதிதான் சுப்பையா என்பது திருநவேலிக்காரர்களுக்குத் தெரிந்திருந்தது. குறும்படம் துவங்கியது. மிகச் சில குறைகளுடன், கூடுமானவரை சரியான முறையில், மூலக்கதையைச் சிதைக்காமல் எடுக்கப்பட்டிருந்தது. கரிசல் கிராமத்து சிறுவர், சிறுமிகளின் தேர்வு அசலாக இருந்தது. இன்றைய தலைமுறையினருக்கு கொஞ்சமும் பரிச்சயமில்லாத , புரிந்து கொள்ள இயலாத விஷயங்களை ‘கதவு’ குறும்படம் காண்பித்தாலும், கதையின் அடிப்படையான விஷயமாக ‘குழந்தைமை’யே என் கண்ணுக்குத் தெரிந்தது. தங்கள் குழந்தைமையை, விளையாட்டை, தட்டிப் பறிக்கப்பட்ட விளையாட்டின் உரிமையை, இழந்து தவிக்கும் குழந்தைகளின் கதையே ‘கதவு’. அவர்களின் வறுமையையும் தாண்டி இந்தக் கவலையே அவர்களின் கண்களின் நிறைந்து நிற்கிறது. அதை முடிந்த அளவில் சரியாகவே சொல்ல முயன்றிருந்தார் ‘கதவு’ குறும்படத்தின் இயக்குனர் மரிய தங்கராஜ். குறும்படத்தின் இறுதியில் தன்னுடைய நேர்காணலில் கி.ரா பாட்டையாவும் இதையே சொன்னது நிறைவாக இருந்தது.



படம் முடியும் நேரத்தில் மின்னலென அரங்கத்துக்குள் நுழைந்தார் ஒரு மனிதர். கையில் ஒரு ஊன்றுகோலும் , தலையில் ‘பித்துக்குளி’ முருகதாசின் காவித்துணியும், நெற்றியில், தமிழ் சினிமாவில் வில்லனை அழிக்கப் புறப்படும் நாயகனின் நெற்றியில் காதலியோ, ஆசைநாயகியோ, அன்னையோ, சித்தியோ, பெரியம்மையோ இடும் நீண்ட குங்குமத் தீற்றலுமாக வந்த அந்த மனிதர், படம் முடிந்ததும் சட்டென்று மைக்கைப் பிடுங்கினார். பிடுங்கிய வேகத்தில் ‘அரட்டை அரங்கம்’ விசுவின் குரலில் ‘கண் . . . . .ணா’ என்று அலறலுடம் மிமிக்ரி பண்ண ஆரம்பித்து விட்டார். அரங்கத்திலிருந்த இலக்கியவாதிகள் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, யாரோ ஒருவர் மட்டும் மட்டும் பின்னால் இருந்து கைதட்டினார். திரும்பிப் பார்த்தேன். நான் சந்தேகப்பட்ட மாதிரியே என்னுடன் வந்த மீனாட்சிதான் அது. என்னைப் பார்த்ததும் தட்டிக் கொண்டிருந்த கைகளை மடக்கிக் கொண்டான். அழையா விருந்தாளியாக வந்து இம்சித்த ‘மிமிக்ரி’காரரிடமிருந்து மைக்கைப் பறிப்பது, ஒரு பின்நவீனத்துவ சிறுகதையைப் படிப்பதை விட சிரமமாக இருந்தது. அதற்குள் அவர் ‘கும்கி’ விக்ரம் பிரபுவின் குரலுக்கு முயன்று கொண்டிருந்தார். வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ‘மிமிக்ரி’ மாமா, ‘வாகை’ சந்திரசேகரின் குரலில் கூடியிருந்த இலக்கியவாதிகள் அனைவரையும் ஆங்கிலத்தில் சபித்தபடி அரங்கை விட்டு வெளியேறினார். கவிஞர் க்ருஷி அதையும் ஆமோதிக்கும் பாவனையில் அமர்ந்திருந்தார்.

அண்ணாச்சிகள் வண்ணதாசன், தமிழ்ச்செல்வன், தேவதச்சன் போன்றோர் இளம் இயக்குனர் மரிய தங்கராஜை வெகுவாக ஊக்குவித்தனர். தமிழ்ச்செல்வன் அண்ணாச்சி, தோழர் உதயசங்கர் உட்பட கரிசல் எழுத்தாளர்கள் அனைவரும் கி.ரா பாட்டையாவை ‘நைனா’ என்று உரிமையுடன் விளித்தது, இயல்பாக இருந்தது. வண்ணதாசன் அண்ணாச்சி கி.ராவைப் பற்றிப் பேசும் போது சொன்னார். ‘சுகாவுக்கு பாட்டையா. கோவில்பட்டிக்காரங்களுக்கு ’நைனா’. எனக்கு ‘மாமா’.

’கூகை’ எழுதிய சோ.தர்மன் அண்ணாச்சி, நரைத்த நீண்ட மீசை துடிக்க, தன்னுடைய இயல்பான மொழியில் ‘கதவு’ குறும்படத்தைப் பாராட்டிப் பேசினார்.

‘சோத்துச் சட்டியா படத்துல என்ன காட்டியிருந்திய ? எவர்சில்வரா? எனக்கு சரியா தெரியல. அதான் கேட்டென். . . . .எவர்சில்வர்தானா? வாய்ப்பே இல்ல. . . . ஐம்பதுகள்ல ஏது எவர்சில்வர்? ஈயம்தான்’.

‘அப்புறம் சோத்துப் பருக்கைய காமிச்சிருந்தீங்களோ? எனக்கு தெரியல. அதான் கேட்டென். . . . . சோத்துப் பருக்கையேதானா? அதெப்படி சோறு இருக்கும்? அப்பல்லாம் சோறே அபூர்வம். கம்மங்கஞ்சிய காமிச்சிருக்கணும்’.

‘அப்புறம் நாய் வந்து குடிச்சுட்டு போயிட்டுன்னு அந்த புள்ள சொல்லுது. அதெப்படி சொல்லுவாங்க, கரிசல் மண்ணுல? நாய் வாய் வச்சிட்டுன்னுதான் சொல்லணும்’.

’மத்தபடி நல்லா எடுத்திருக்கீங்க. வாழ்த்துகள்’.

மறுநாள் மாலை சென்னைக்குத் திரும்ப ரயில். காலையில் மீனாட்சியுடன் தி.க.சி தாத்தாவைப் பார்க்கக் கிளம்பினேன். அம்மன் சன்னதி, கீழரதவீதி, தெற்குரதவீதி, மேல ரதவீதி எல்லாமே மாறியிருந்தது.

‘தெரிஞ்ச மனுசங்களத்தான் காணோம். கட்டிடங்களுமால மாறும்?’ மீனாட்சியிடம் கேட்டேன்.

’இதுக்கே இப்பிடி சொல்லுதேளே! இன்னும் நீங்க வடக்கு ரதவீதிய பாக்கலேல்லா? வாங்க’.

கூட்டிக் கொண்டு போய் ராயல் டாக்கீஸ் முன்பு கொண்டு போய் நிறுத்தினான். அங்கு பிரமாண்டமாய் ‘போத்தீஸ்’ கட்டிடம் எழும்பி நின்று கொண்டிருந்தது. ‘ராயல் டாக்கீஸ்’ இடிக்கப்பட்டதும், அங்கு ‘போத்தீஸ்’ வந்து விட்டதும் நான் ஏற்கனவே அறிந்ததுதான். இருந்தாலும், அன்றைக்கு அந்தச் சூழலில் ஏனோ துக்கம் தொண்டையை அடைத்தது.

‘எல, பொதுமக்கள் நீங்க எல்லாரும் தெரண்டு போய் நின்னு, ராயல் டாக்கீஸ இடிக்க விடாம தடுத்திருக்கலாம்லா?’

சுத்த கோட்டிக்காரத்தனம்தானென்றாலும் மீனாட்சியிடம் இப்படி கேட்கத் தோன்றியது.

நான் வருவதை ஏற்கனவே அறிந்திருந்த தி.க.சி தாத்தா தன் வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்றார்.

‘வாங்கய்யா பேரப்பிள்ள. நேத்து ‘கதவு’ குறும்பட நிகழ்ச்சில நீங்க பேசுனது, இன்னிக்கு ஃபோட்டோவோட தினமணில வந்திருக்கே! நல்லா பேசியிருக்கேரு!’

காரை பெயர்ந்த சுவரின் பின்னணியில் தி.க.சி தாத்தாவுக்கு அருகில் உள்ள படியில் மீனாட்சி உட்கார்ந்து கொண்டான். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதையே கவனித்துக் கொண்டிருந்தேன். மனம் எங்கெங்கோ அலைந்தது. இரண்டு வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த வர்கள் இருவரும் அந்த சமயத்தில் , அவர்களின் அந்நியோன்யத்தில் எனக்கு ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்களாகத் தெரிந்தார்கள்.

’கதவு’ குறும்பட நிகழ்ச்சி ஒன்றைத் தவிர, இந்த முறை திருநவேலி பயணம் அவ்வளவாக ருசிக்கவில்லை. குஞ்சு ஊரில் இருந்திருந்தானென்றால் ஒருவேளை நன்றாக இருந்திருக்கலாம். அவனும் திருவனந்தபுரம் சென்று விட்டான். அந்த வெறுமையும் ஒரு காரணம். ‘பாக்கேன்’ என்பதை ‘பாக்கிறேன்’ என்றும், ‘சொல்லுதென்’ என்பதை ‘சொல்றேன்’ என்றும் திருநவேலியை, திருநெல்வேலியாக்கும் இளைஞர்களின் நாகரிகப் பேச்சு ஒருபுறம். தோற்றத்திலேயே மாறத் துவங்கியிருக்கும் திருநவேலி நகரம் மறுபுறம். ‘அதெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது. சரி சரி. கடமயச் செய்யாம போயிராதிய. அம்மையப்பனப் பாத்துட்டு வந்திருவோம், வாங்க’. நெல்லையப்பர் கோயிலுக்கு அழைத்துச் சென்றான், மீனாட்சி. உள்ளே நுழையும் போதே அவன் சட்டை கிழன்று, கைகளில் மடிந்தது. கோயிலுக்குள்ளே மழைநீர் தேங்காமல் வடியும் விதமாக, நடுவில் குழி தோண்டிப் போட்டிருந்தார்கள். காந்திமதியம்மையை வணங்கிவிட்டு, சுவாமி சன்னிதிக்குச் செல்லும் வழியில் , முகப்பில் மாக்காளையைப் பார்க்கும் போதே, மனதுக்குள் இனம் புரியாத பரவசம். உள்ளே நெல்லையப்பர், ராமக்கோனின் கோடரியால் வெட்டப்பட்ட நெற்றியுடன், சின்னப் பிள்ளையாக இருக்கும் போது நான் பார்த்த அதே நெல்லையப்பராக இருந்தார்.


Monday, January 28, 2013

தேவதேவனுக்காக இளையராஜாவுடன் . . .

’நீயும் என்கூடவே ஃப்ளைட்ல வந்துரு’ என்றார் இளையராஜா. ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தை’ நான்தான் நடத்துகிறேன் என்பது போலவே அவரது பேச்சு இருந்தது. அதில் ஆச்சரியமில்லை. ஒவ்வொரு முறை அவரை சந்திக்க ஜெயமோகன் செல்லும்போதும் நான்தான் அழைத்துச் சென்றிருக்கிறேன். ஆகையால் அவர் அப்படி நினைத்திருக்கலாம். முதலில் ஜெயமோகன் அவரைச் சந்தித்து தேவதேவனுக்கான விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டபோது மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டார். சட்டென்று அவர் ஒத்துக் கொண்டதற்கு ஜெயமோகன் கேட்டுக் கொண்டவிதம்தான் காரணம். ‘தேவதேவனை மாதிரி எத்தனையோ படைப்பாளிகள பரவலா யாரும் கண்டுக்கல. ஒங்கள மாதிரி பெரிய ஆளுமைகள் வந்து அவர கௌரவிச்சா, ஒரு கவனம் வரும். குறைந்தபட்சம் அவரோட குடும்பத்தச் சேந்தவங்களுக்காவது, ‘இத்தன வருஷமா இவரு ஏதோ பண்ணிக்கிட்டிருந்திருக்காருன்னு’ தெரிய வரும்’. ஜெயமோகன் சொன்னது, இளையராஜாவின் மனதில் சட்டென்று போய்ச் சேர்ந்தது. உடனே சொன்னார். ‘இந்த மாதிரி அசலான இலக்கியவாதிகளையெல்லாம் கௌரவிக்கணும்னு எனக்கும் ஆசைதான். ஆனா சமகாலத்துல இயங்கிக்கிட்டிருக்கிற இலக்கியவாதிங்களப் பத்தி எனக்கு தெரியாது. ஒங்கள மாதிரி யாராவது சொன்னாத்தான் தெரியும்’ என்றார். விழாவில் கலந்து கொள்ள நன்றி சொல்லிவிட்டு ஜெயமோகன் நாகர்கோயிலுக்குக் கிளம்பிச் சென்று விட்டார். ஆனால் அதற்குப் பிறகுதான் சிக்கல் ஆரம்பமானது. ஒத்துக் கொண்ட தேதியில் இளையராஜாவால் கோவைக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது. ‘நாளைக்கு சொல்லிடறேனே’ என்று நான்கைந்து முறை சொன்னார். இதற்குள் ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திலிருந்து’ எனக்கு ஃபோனுக்கு மேலே ஃபோன். இன்விட்டேஷன் அடிக்கணும். கொஞ்சம் சீக்கிரமா கேட்டு சொன்னீங்கன்னா…



பொதுவாகவே இளையராஜா அவர்களை அடிக்கடி சென்று பார்க்கும் வழக்கமுடையவனல்ல நான். எப்போதாவது செல்வேன். ‘என்னய்யா, ஒன்ன ஆளையே காணோம்?’ ஒவ்வொரு முறையும் அவரது வரவேற்பு இப்படித்தான் இருக்கும். ஆனால் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்துக்காக பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தை வட்டமிட்டபடியே இருந்தேன். நண்பர் கே.பி.வினோத்திடமிருந்து ‘குட்மார்னிங், குட் லெவன் ஓ’கிளாக், குட் ட்வெல்வ் ஓ’ க்ளாக்’ ஃபோன்கள் வந்தவன்ணம் இருந்தன. ஜெயமோகனால் அறிமுகமான வினோத் எனக்கு மிக நெருக்கமான நண்பரானவர். அதனால்தான் கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இளையராஜாவுக்காக எனக்கு ஒருநாளைக்கு ஆறு முறை ஃபோன் பண்ணினார். ஒருமாதிரியாக இளையராஜா 22ஆம் தேதி போயிரலாம் என்றார். கூடவே, ‘நீயும், நானும் ஒண்ணாத்தானே போறோம்?’ என்றும் கேட்டுக் கொண்டார். வெளியே வந்து வினோத்துக்கு ஃபோன் பண்ணிச் சொல்லி, இன்விட்டேஷன் அடிச்சுக்கோங்க என்று உறுதியாகச் சொல்ல முடிந்தது.

22ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இளையராஜா அவர்களுடன் அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருக்கும்போது, கோவையிலிருந்து அரங்கசாமி அழைத்து, ‘அண்ணா’ என்றார். ‘ஏர்போர்ர்ட்ல இருக்கோம், அரங்கசாமி’ என்றேன். ஃபிளைட் ஏறும் வழியில் அவசர அவசரமாக ஒருவர் ஓடி வந்து இளையராஜாவிடம், ‘ஸார், நீங்க கங்கை அமரன்தானே?’ என்று கேட்டார். இளையராஜாவும் சிரித்தபடியே ‘ஆமாங்க’ என்றார். விமானத்தில் உட்கார்ந்திருக்கும்போது ‘ஏன் ஸார் அந்தாளு கேட்டதுக்கு ஆமான்னு சொன்னீங்க’ என்று கேட்டேன். “நீங்க இளையராஜாவா, கங்கை அமரனான்னு கேட்டிருந்தாருன்னா ‘இல்லீங்க. நான் இளையராஜா’ன்னு சொல்லியிருக்கலாம். அவர் ஸ்ட்ரெய்ட்டா கங்கை அமரன் தானேன்னு கன்ஃபர்ம் பண்ணிக்கிட கேக்குறாரு. சரி, அவர் ஆசையக் கெடுப்பானேன்னு ஆமான்னு சொல்லிட்டேன்.” சொல்லிவிட்டு சிரித்தார். “இது பரவாயில்ல. மதுரை ஏர்போர்ட்டுல போயி எறங்குவேன். அவசர அவசரமா ஓடிவந்து, ‘ஸார், மதுரைக்கு வந்திருக்கீங்களா’ன்னு கேப்பாங்க.” மேலும் சிரித்தார். பிரபலமானவர்களை எதிர்பாராவிதமாக சட்டென்று பார்க்கும் மனிதர்கள், பிரமிப்பு நீங்காமல் ஏதாவது பேசியே ஆக வேண்டும் என்று இப்படி பேசுவதை பலமுறை பார்த்திருக்கிறேன். ஒருசிலர் இப்படி ஏதாவது கேட்டுவிட்டு நாக்கைக் கடித்துக் கொள்வார்கள். வெகுசிலர் விடாப்பிடியாகக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். “ஸார், மதுரைக்கு வந்திருக்கீங்களா?”

ஜெயமோகன் சொல்லி வினோத் என் கையில் கொடுத்திருந்த, தேவதேவனைப் பற்றிய குறிப்புகளும், ஒருசில கவிதைகளும் அடங்கிய தாள்களைக் கொடுத்தேன். விமானத்திலேயே படித்தார். அவருக்குப் பிடித்திருந்தது. பிறகு ஏதேதோ பேசிக் கொண்டே போனதில் நேரம் போனதே தெரியவில்லை. வயிற்றில் புளி கரைந்து, காதுகளில் ஒருமாதிரியான பாதாள ஒலி கேட்டபிறகுதான் கோவை வந்துவிட்டதை உணர முடிந்தது. கோவை விமானநிலையத்தில் நாஞ்சில் நாடன் சித்தப்பா தலைமையில் அரங்கசாமியுடன் ஜெயமோகன் கையசைத்தார். பார்க் பிளாஸா என்ற ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்கள். விமான நிலையத்திலேயே ஜெயமோகன் என் காதைக் கடித்தார். ‘பெரியவரை ரூம்ல விட்டுட்டு வந்திருங்க. ஒங்களுக்காக ஒரு பெரும் கூட்டமே காத்துக்கிட்டிருக்கு’. பார்க் பிளாஸாவுக்குப் போய், இளையராஜாவுக்கான ஸ்யூட்டில் (suite- சரிதானே பாட்டையா?) அவரை விட்டுவிட்டு, ‘ஸார், அப்ப சாயங்காலம் வந்து ஃபங்க்‌ஷனுக்குக் கெளம்பும் போது வரேன். ரெஸ்ட் எடுங்க’ என்றேன். ‘ரெஸ்ட் எடுக்கவா? நாம என்ன மலையேறியா வந்திருக்கோம்? அட போய்யா. என் கூட இரு. தனியா இருக்கேன்’ என்றார். அதே தளத்தில் எனக்கொரு அறையை ஏற்பாடு செய்தார்.

அதற்குள் பத்திரிகையுலகம், காவல்துறை, கோவையின் முக்கியஸ்தர்கள் என வரிசையாக இளையராஜாவை சந்திக்கும் பொருட்டு என்னைத் தொடர்பு கொள்ளத் துவங்கினர். மாலையில் நிகழ்ச்சிக்குக் கிளம்பினோம். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் வந்திருந்தார். கார் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்துக்குள் நுழையும்போதே, பெரும் கூட்டம் வாசலில் காத்து நிற்பதைப் பார்க்க முடிந்தது. இளையராஜாவால் கீழே இறங்கவே முடியவில்லை. மொய்த்துக் கொண்டார்கள். ஒரே சத்தம். ஒரு சில அழுகையொலிகளும் கேட்டன. ஒருசில நொடிகளிலேயே கூட்டத்துக்குள் நான் தொலைந்துப் போக இருந்தேன். நல்ல வேளையாக முகம் தெரியாத அரங்கசாமியின் நண்பர்கள் வந்து என்னை மீட்டு அழைத்துச் சென்றனர். ஒருமாதிரியாக முழிபிதுங்கி, ஓர் அறைக்குள் நுழைந்து மூச்சு விட யத்தனித்த போதுதான் தெரிந்தது, அது மேடை என்று. சிறப்பு அழைப்பாளர்களில் நானும் ஒருவன் என்பதால், மூச்சை முழுங்கிக் கொண்டு உட்கார்ந்தேன். இரண்டு சிறுமிகள் ஸ்ருதிசுத்தமாக ‘மாசறு பொன்னே வருக’ பாடினார்கள்.



பார்வையாளர்களின் முதல் வரிசையில் சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா, ஓவியர் ஜீவானந்தன் என்று தெரிந்த முகங்கள். கூடவே பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களும் அமர்ந்திருந்தார். சாத்தான்குளத்து செல்வேந்திரன் நிகழ்ச்சியைத் தொகுக்க, அரங்கசாமி வரவேற்புரை நிகழ்த்தும்போதுதான் தேவதேவன் அண்ணாச்சியைப் பார்க்கவேயில்லையே என்று மண்டையில் உறைத்தது. உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே, இளையராஜா அவர்களின் அருகில் அமர்ந்திருந்த தேவதேவன் அண்ணாச்சியை நைசாக எட்டிப் பார்த்தேன். அவரும் அங்கிருந்து ரகசியமாக என்னை எட்டிப் பார்த்தார். இருவருமே சட்டென்று பார்வையைத் தாழ்த்திக் கொண்டோம்.




நாஞ்சில் நாடன் சித்தப்பா தன் தலைமையுரையைத் துவக்கினார். அவரது பேச்சை பலமுறை கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் இயல்பான மொழியிலேயே அவரது உரை அமைந்திருக்கும். இந்தமுறை அவர் இளையராஜாவைப் பற்றியே அதிகம் பேசினார். தேவதேவனின் குறிப்பிட்ட கவிதைகள் சிலவற்றைப் பற்றிச் சொல்லி முடித்துக் கொண்டார். அடுத்து மோகனரங்கன் தனது உரையை எழுதி வந்து வாசிக்கத் துவங்கினார். ரொம்பவே அர்த்தபுஷ்டியான உரை என்பதால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அடுத்து பேசிய ராஜகோபாலின் உரை, மோகனரங்கனின் உரையை விட தடிமனானது. நிறைய தாள்கள் கொண்டு வந்திருந்தார். ஆனால் அவற்றைப் பார்க்காமலேயே பேசினார். அதிலும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. புரியவில்லை என்பதைவிட தெரியவில்லை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இத்தனைக்கும் நான் படித்து ரசித்த தேவதேவன் கவிதைகள்தான். ஆனால் இவர்கள் சொல்லிக் கேட்க புத்தம் புதுசாக எழுதப்பட்ட வேறொரு கவிதை மாதிரி இருந்தது. ஒருமாதிரி திகிலுடன் உட்கார்ந்திருக்கும்போது, என்னருகில் அமர்ந்திருந்த கேரளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் தொண்டையைக் கனைத்தபடி, என் காதருகே குனிந்து என்னமோ கேட்க வந்தார். ராஜகோபாலின் பேச்சிலிருந்து ஏதேனும் கேள்வி கேட்பாரோ என்று பயந்தபடியே காதைக் கொடுத்தேன்



‘மூத்திரம் கழிச்சுட்டு வந்துரட்டுமா, சுகா?’ என்று வகுப்பாசிரியரிடம் மாணவன் கேட்பது போல் கேட்ட பிறகுதான் எனக்கு நிம்மதி வந்தது. ‘கவலப்படாம போயிட்டு வாங்க, ஸார். ஒங்க எடத்த நான் பாத்துக்கிடறேன். அதுக்குள்ள ராஜகோபால் முடிச்சிடுவாரு’ என்று சொல்ல நினைத்து, தவிர்த்துக் கொண்டு ‘போயிட்டு வாங்க ஸார்’ என்று மட்டும் சொன்னேன். ஆனால் அவர் வருவதற்குள் வேறு யாராவது வந்து அவர் இடத்தில் உட்கார்ந்து, ‘ஒங்கிட்டதானலெ சொல்லிட்டு போனேன்’ என்று கவிஞர் வந்து மலையாளத்தில் ஏசுவாரோ என்கிற பயம், அவர் வந்து அமரும் வரை இருந்தது.

அடுத்து கல்பற்றா நாராயணன் பேசுவார் என்று அறிவித்தார்கள். கூடவே அவரது மலையாள உரையை மொழிபெயர்க்க கே.பி.வினோத் கையில் ஒரு மைக் கொடுக்கப்பட்டது. சுவாரஸ்யமாகப் பேசினார் கவிஞர். ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கல்பற்றா நாராயணனைப் போன்றவர்களை அழைத்தால் நிச்சயம் இலக்கிய விழா கலகலப்பாக மாறும். ஆனால் கவிஞரின் மலையாள உரையை தமிழில் மொழிபெயர்க்க வினோத் எடுத்த முயற்சிகளில்தான் அவருக்கு கதகளியாட்டம் தெரியும் என்கிற விஷயம் தெரிய வந்தது. இத்தனை நாட்களில் அவர் என்னிடத்தில் மறைத்து விட்ட ரகசியம் அது. அதுவும் கையைக் கட்டிக் கொண்டே கதகளி ஆட முடியும் என்பதை என்னைப் போன்ற பாமரனுக்கு வினோத் உணர்த்தினார். மற்றபடி பார்வையாளர்களுக்கு, கல்பற்றா நாராயணின் மலையாள உரை, மொழியைப் பெயர்க்காமலேயே சரியாகப் போய்ச் சேர்ந்தது.




எல்லோரும் கவிஞரின் பேச்சை ரசித்துக் கொண்டிருக்க, நான் மட்டும் கலக்கத்தில் அமர்ந்திருந்தேன். காரணம், செல்வேந்திரன் என் காதில் முணுமுணுத்துச் சொன்ன ஒரு விஷயம். ‘அண்ணே, ஒங்கள கடசியாத்தான் பேச விடப் போறோம்.’




என் பெயரை அறிவித்தவுடன் கைதட்டினார்கள். யாரோ ஒருவர் எழுந்து நின்று கைதட்டி என்னைக் கலவரப்படுத்தினார். ‘முதலில் கோவை மாநகரமக்களுக்கு என் வணக்கங்கள்’ என்கிற முதல் வரியை மட்டும் என் குரலில் நான் கேட்டேன். பிறகு ஏதேதோ பேசி விட்டு உட்கார்ந்த பின்னும் கால் ஆடிக்கொண்டுதானிருந்தது.




இதற்குள், வெளியே இளையராஜாவைப் பார்க்க வேண்டும் என்பதற்காக பெரும் ஜனத்திரள் திரண்டு நிற்கிறது என்றும், ஜாக்கிரதையாக அவரை அழைத்துச் செல்லவேண்டும் என்றும் அரங்கசாமி சொன்னார். ‘கடைசி வரைக்கும் அவர் இருக்கணும்னு இல்லண்ணா. எப்படியாவது வெளியே கூட்டிட்டு போயிருங்க’ என்றார். இளையராஜா அவர்களிடம் போய் மெதுவாகச் சொன்னேன். ‘தேவதேவனோட ஏற்புரையைக் கேக்காம நாம போறது முறையில்லையே?’ என்றார். ‘ஸார், வெளியே கூட்டத்தை கண்ட்ரோல் பண்ண முடியாம திணறுராங்க. தேவதேவன்கிட்டே நான் சொல்லிக்கறேன்’ என்று சொல்லிவிட்டு, தேவதேவன் அண்ணாச்சியின் காதைக் கடித்தேன். ‘ஒண்ணும் பிரச்சனையில்ல. மொதல்ல கெளம்புங்க’ என்றார். ஆனால் நினைத்த படி வெளியே வர முடியவில்லை. புகைப்படக் கலைஞர்களும், பொதுஜனங்களுமாக நிறைந்து நின்றனர். அவர்களைத் தாண்டி காரில் ஏறுவது சாத்தியம் என்றே தோன்றவில்லை. ஒவ்வொருவராகப் பார்த்து, புகைப்படம் எடுத்து, பிறகு போகலாம் என்றால் அதற்கும் இடமிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு மாதிரியான பரவச மனநிலையில் அனைவருமே இருந்தனர். தடால் தடாலெனக் காலில் விழுந்தனர். ஒருசிலர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு இளையராஜாவின் மேல் கிட்டத்தட்டப் பாய்வதற்கு முற்பட்டனர்.

மீண்டும் மேடைக்கே திரும்பினோம். நான் மட்டும் அவரது பையை எடுத்துக் கொண்டு மேடையை விட்டு இறங்கி, பின்பக்கமாக எப்படி போகலாம் என்று பார்க்கப் போனேன். என்னைச் சூழ்ந்து கொண்டனர். ‘டேய், இவரில்லாம அவரு போக மாட்டாருடா. விடாதீங்கடா’ என்று பாய்ந்தனர். கிட்டத்தட்ட அவர்களிடத்தில் பணயக் கைதியாக மாட்டிக் கொண்டேன். அவர்களில் ஒருசிலருக்கு என்னைத் தெரிந்திருந்தது. ஒரு நண்பர் என் கைகளைப் பற்றி அழுத்தமாகக் குலுக்கி, ‘விகடன்ல நீங்க எளுதுன முந்தான முடிச்சுக்கு நான் அடிமை’ என்று பலாப்பழ வாசனையுடன் குளறலாகச் சொன்னார். மேலும் ரகசியமாக ஏதோ சொல்லும் தோரணையில் என் காதருகே ‘உ’ என்று உதட்டைக் குவித்தபடி நெருங்கினார். நெற்றியில் உள்ள திருநீற்றைப் பார்த்து, ‘உலகம் சிவமயம்’ என்று சொல்ல வருகிறார் என்று நினைத்து, காதை நீட்டவும், எதிர்பாராவிதமாகக் கன்னத்தை எச்சிலாக்கினார். இந்த அதிர்ச்சியிலிருந்து நான் மீள்வதற்குள், இன்னொரு நண்பர் வந்து, ‘இலக்கிய கூட்டத்துலயே சினிமாக்காரர்களை, அரசியல்வாதிகளை விமர்சிக்க இலக்கியவாதிகளுக்கு அருகதை இல்லைன்னு தைரியமா சொல்லிட்டீங்க, ஸார். சூப்பர்’ என்று மேலும் அதிர்ச்சிக்குள்ளக்கினார். ‘அய்யய்யோ, அது ஏதோ கூட்டத்தல்லாம் பாத்ததுல டங்குஸ்லிப்பா சொன்னது. மன்னிச்சுக்குங்க’ என்று பதறினேன். ‘அட, நான் ஒண்ணும் இலக்கியவாதில்லாம் இல்ல, ஸார். வெறும் கவிஞர்தான். ரெண்டு புஸ்தகம் போட்டிருக்கென். சினிமால சான்ஸு குடுத்தீங்கன்னா முத்துக்குமாரையெல்லாம் உக்கார வச்சுரலாம். கொஞ்சம் இருங்க’ என்று கைப்பையில் என்னவோ தேடினார். இதற்குள் தூரத்தில் இருந்து ஒருவர் கத்தினார். ‘இளையராஜா என்ன ஒங்க வீட்டு சொத்தாடா? அவரு மக்கள் சொத்துடா. தமிழனின் சொத்து. எங்கள் சொத்து’ என்று அடுக்கிக் கொண்டே போய், கடைசியில் என் சகோதரியை ஏசி முத்தாய்ப்பாய் முடித்துக் கொண்டார்.

ஒருவழியாக அரங்கசாமியின் ஆட்கள் வந்து என்னை மீட்டனர். ஃபோன் வந்தது. இளையராஜா ஸார் பேசினார். ‘நான் வேற கார்ல போயிக்கிட்டிருக்கென். நீ சீக்கிரம் வந்திரு’ என்றார். ‘என்னால ஒடனெ வந்துட முடியுமான்னு தெரியல ஸார்’ என்றேன். ‘யோவ், நீ வந்துதான்யா ஆகணும். ரூம் கீயும், பையும் ஒங்கிட்டதான் இருக்கு. மறந்துட்டியா?’ என்றார். அரங்கசாமியின் தோழர்கள் ஒரு காரில் என்னை அடைத்து, பறந்தனர். காரை ஓட்டியவர் சொன்னார். ‘அண்ணா, நீங்க கமல் ஸார் பேரச் சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்கண்ணா. நாங்கல்லாம் ஒலகநாயகனோட தீவிர ரசிகர்கள்’. எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. ‘கமல் பேரைச் சொன்னேனா?’ காட்டிக் கொள்ளாமல், ‘அவரு பேரச் சொல்லாம இருக்க முடியுமா, பிரதர்?’ என்றேன். காரின் வேகம் அதிகரித்தது. கமலஹாசன் பெயரை எப்போது சொன்னோம் என்று யோசிப்பதற்குள், இளையராஜாவுக்கு முன்னதாகவே கொண்டு போய் ஹோட்டலில் இறக்கி விட்டனர்.

இரவு உணவு முடிந்து, தூங்கும் வரை அவருடன் இருந்து விட்டு, என் அறைக்கு வந்தேன். இரவு 11 மணிக்கு சகோதரர் மரபின் மைந்தன் முத்தையாவுடன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் வந்தார். ஏற்கனவே ஃபோன் மூலம் அவர்கள் வருவதைத் தெரிவித்திருந்தனர். நள்ளிரவு 2 மணிவரைக்கும் உரையாடல் நீடித்தது. சிரித்து சிரித்து இருமல் வந்தது. கிளம்பும் போது, அந்த நள்ளிரவு நேரத்திலும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். எனது கைபேசியில் புகைப்படம் எடுக்க முயன்ற மரபின் மைந்தன், அதற்குப் பிறகு எந்த சூழலிலும் என் கைபேசியிலுள்ள கேமராவை பயன்படுத்த முடியாமல் ஆக்கினார். ‘புலவங்க சகவாசம் வேண்டான்னு இதுக்குத்தான் சொல்லுவாங்க’ என்று நான் மனதுக்குள் சொன்னது, பேராசிரியருக்குக் கேட்டு விட்டது. சிரித்தபடியே கிளம்பிப் போனார்.

மறுநாள் மாலை இளையராஜா அவர்களின் கச்சேரி இருந்தது. அதற்கும் நான் அவருடன் இருக்க வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். காலையில் என் அறையில் குளித்து முடித்து கிளம்பிக் கொண்டிருக்கும் போதே, ஃபோன் பண்ணி அழைத்து, ‘சாப்பிடலாமா? உனக்காகத்தான் வெயிட் பண்றேன்’ என்றார். அவசர அவசரமாக வெளியே ஓடி வந்தேன். என் அறைக்கு வெளியே கும்பலாக நின்று கொண்டிருந்தனர். ‘ஸார், திருப்பூர்ல இருந்து வர்றோம், ஸார். நேத்து ராத்திரிலேருந்தே ஐயாவப் பாக்கணும்னுதான் காத்துக்கிட்டிருக்கோம்’. அவர்களை அழைத்துச் சென்று புகைப்படம் எடுக்க வைத்து அனுப்பி வைத்தேன். அவர் காலில் விழுந்தவர்களில் ஒருவர், வெளியே வந்து என் கால்களைத் தொட முயன்றார். பதறிப் போய்த் தடுத்தேன். ‘என் வாழ்க்கையில நீங்க எவ்ளோ பெரிய உதவி செஞ்சிருக்கீங்கன்னு ஒங்களுக்கு தெரியாதுங்கண்ணா’. கண் கலங்கச் சொல்லிவிட்டு, என் கைகளைப் பிடித்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். அடுத்தடுத்து பலர். மதிய உணவுக்குப் பிறகு, என்னறைக்குத் திரும்பும் போது ஓர் இளைஞர் கூட்டம் என்னை மறித்தது. ‘ஐயாவ பாக்கணும், ஸார்’. ‘இல்லீங்க. இப்பதான் அவரு கொஞ்சம் ஃப்ரீ ஆனாரு. சாயங்காலம் பாக்கலாமே’. அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. ‘அவர பாக்காம போக மாட்டோம்’ என்றார்கள். எனக்கு இருக்கும் சங்கடம் என்னவென்றால், அவரது அறைக்கு ஒவ்வொரு முறை சென்று கதவைத் தட்டும் போதும், உள்ளறையிலிருந்து அவரே வந்துக் கதவைத் திறக்க வேண்டும். அப்படி அவரை அடிக்கடி சிரமப்படுத்துவதைத் தவிர்க்க எண்ணினேன். ‘இப்ப அவர தொந்தரவு பண்ண முடியாதுங்க. சாயங்காலம் நிகழ்ச்சி நடத்துற இடத்துக்கு வாங்க’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்கத் துவங்கினேன். என்னைத் தாண்டி வேகமாகச் சென்ற ஓர் இளைஞர், முன்னாலிருந்த கண்ணாடிச் சுவரைக் காட்டி, ‘நீங்க மட்டும் இப்ப ஐயாவப் பாக்க விடலேன்னா இங்கேருந்து கீழே குதிச்சிருவேண்ணா’ என்று சொன்னபடி, இரண்டாவது மாடியிலுள்ள ஜன்னல் கண்ணாடியை நோக்கி, ஓட்டப் பந்தயவீரன் போலக் கால்களைத் தரையில் தேய்த்து, மூச்சை இழுத்தவாறே தயாரானார்.. ‘எப்பா, ஏஎய்ய்ய்’ அடிவயிறு கலங்க அந்தப் பையனின் கைகளை எட்டிப் பிடித்தேன். மீண்டும் இளையராஜாவின் அறையைத் தட்டி, ‘ஸார், கொலைக் கேஸுல உள்ள தள்ளிருவாங்க போல. ஃபேன்ஸ் வந்திருக்காங்க’ என்று சொல்லி அழைத்துச் சென்றேன். கண்களைத் துடைத்தபடி மனநிறைவோடு திரும்பினர் இளைஞர்கள்.

சென்னைக்குத் திரும்பும்போது, விமானத்தில் இளையராஜா அவர்கள் சொல்லிக்கொண்டே இருந்தார். ‘தேவதேவனுக்கு விருது கொடுக்கப் போயிட்டு, அவரோட ஏற்புரையக் கேக்கல. தப்பா நெனச்சிருக்க மாட்டாரே?’. ’அதான் மேடைலயே அவர்கிட்டெ சொல்லிட்டுதானே ஸார் கெளம்பினோம்?’ சமாதானம் சொன்னேன். ஆனால் நாங்கள் வந்த பிறகு தேவதேவன் அண்ணாச்சி தன்னுடைய ஏற்புரையில், எழுதி வைத்து கொண்டு வந்த முப்பது பக்கங்களுக்குக் குறையாத உரையின் மூலம் கண்ணீர்ப் புகை குண்டை, கூட்டத்தை நோக்கி வீசிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினோம். காரை நோக்கி விரைந்து நடந்து கொண்டிருக்கும் போது, எதிரே வந்த ஒருவர் கண்ணுக்கு முன்னால் எதிர்பாராதவிதமாக இளையராஜாவைப் பார்த்தவுடன், ஒருகணம் திகைத்து, பின் ‘ஃபிளைட்ல வந்தீங்களா, ஸார்?’ என்று கேட்டார்.

Sunday, December 16, 2012

பாட்டையா பார்த்த மனிதர்கள்



கதையல்லாத Non fiction ஐட்டங்களின் மேல் சிறுவயது முதலே எனக்கோர் ஈர்ப்புண்டு. ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாரின் கடிதங்கள் தொடங்கி ஜெயகாந்தனின் ‘அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’ மற்றும் ‘அவர்கள் வெளியே இருக்கிறார்கள்’, சுஜாதாவின் ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள், கற்றதும் பெற்றதும்’, வண்ணதாசன் அண்ணாச்சியின் ‘என்றென்றும் அன்புடன்’, நாஞ்சில் சித்தப்பாவின் ’தீதும், நன்றும்’, பெரியவர் அ.முத்துலிங்கத்தின் கதையும், கட்டுரையுமல்லாத நடைச்சித்திரங்கள் வரை மனதைக் கவர்ந்தவை, கவர்பவை அவைதாம். (இந்தப் பட்டியலில் இன்னும் இரண்டு புத்தகங்களைச் சொல்லலாம் என்று பார்த்தால் பாழாய்ப் போன தன்னடக்கம் தடுத்துத் தொலைகிறது, சனியன்.) மேற்சொன்னவை யாவுமே புத்தகவடிவில் என்னிடத்தில் உள்ளன. ஆனால் இவற்றுள் மீண்டும், மீண்டும் எடுத்துப் படிக்கும் புத்தகமாக ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், அது பாரதி மணி அவர்களின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தைத்தான். ஊருக்கெல்லாம் அவர் (பாரதி படத்துக்குப் பிறகு) பாரதி மணி. எனக்கு அவர் ‘பாட்டையா’. இப்போது பலரும் அவரை ‘பாட்டையா’ என்றழைப்பதைப் பார்க்கும் போது, அவரை அப்படி விளித்த முதல் ஆள் நான் என்பதில் மகிழ்கிறேன்.

‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தின் கட்டுரைகள் அனைத்தையும் ‘உயிர்மை’யில் வெளிவந்த போதே படித்திருக்கிறேன். சிலவற்றை அதற்கு முன்பே. முதல் கட்டுரைக்கே ஜெயமோகன் என்னும் வாசகர் பாட்டையாவுக்குக் கிடைத்தார் என்றால் அதற்கு மேல் அவரது எழுத்தைப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்லை. அப்படியென்றால் இந்தக் கட்டுரையை இப்படியே முடித்து விடலாமா? அதுவும் முடியாது. நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது.



மொத்தம் பதினெட்டு கட்டுரைகள். அவற்றில் மூன்று ‘அமுதசுரபி’யிலும், ஒன்று ‘உயிர் எழுத்து’ இதழிலும், மற்றொன்று ‘தீராநதி’யிலும், பிற அனைத்தும் ‘உயிர்மை’யிலும் வெளியானவை. ‘பாட்டையா’வைப் போல நானும் ஒரு சங்கீதக் கோட்டி என்பதால், இந்தப் புத்தகத்தின் என்னுடைய Most favourite ’நாதஸ்வரம் – என்னை மயக்கும் மகுடி’ என்னும் கட்டுரைதான். சின்னஞ்சிறுவனாக தன் தகப்பனாருடன் கன்னியாகுமரி ஜில்லாவின் சுசீந்திரம், மஹாதானபுரம், ஆராம்புளி(ஆரல்வாய்மொழி), தேரூர், பத்மநாபபுரம், பூதப்பாண்டி, மண்டைக்காடு, ராஜாக்கமங்கலம் போன்ற ஊர்த் திருவிழாக்களுக்குச் சென்று தான் கேட்டு ருசித்த நாதஸ்வரக் கச்சேரிகளை நினைவுகூரும் அசத்தலான கட்டுரை இது. நாதஸ்வரத்தை நாகஸ்வரம் என்றுதான் அழைக்க வேண்டும் என்பது தெரிந்தாலும், அது இன்றைக்கும் பெரும்பாலோனாரால் நாதஸ்வரம் என்றே அழைக்கப்படுகிறது. அதையும் இந்தக் கட்டுரையில், எனக்கு நாதஸ்வரம்தான் பிடித்திருக்கிறது என்று சொல்கிறார். நாதஸ்வரத்தின் போனஜென்மத்துப் பெயர் ‘திமிரிநாயனம்’ என்பதையும், அது ‘பாரிநாயனம்’ ஆக மாறியதையும் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையைத் தேடிப் பிடித்துப் படியுங்கள். இதுபோக, தான் கேட்டு ரசித்த நாதஸ்வர மேதைகளைப் பட்டியல் இடுகிறார். ‘நாதஸ்வரச் சக்கரவர்த்தி’ திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி பி. அருணாசலம், நாச்சியார்கோயில் ராகவபிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல் என இவர் அடுக்கும் போது பொறாமையில் வயிறு எரிகிறது. அதுவும் என் உள்ளம் கவர்ந்த நாதஸ்வர மாமேதை காருகுறிச்சியாரை ‘குருவை மிஞ்சிய சிஷ்யர்’ என்று, பெரியவர் ராஜரத்தினம் பிள்ளையுடன் ஒப்பிடும் போது மனம் மகிழ்ச்சியில் நிறைகிறது. சுசீந்திரம் கோயில் மேடையில் தன் சிஷ்யர் காருகுறிச்சி பின்னால் அமர்ந்திருக்க ராஜரத்தினம் பிள்ளை வாசித்த கச்சேரியின் போது ‘மேடைக்கு முன்னால் உட்கார்ந்து, தலையாட்டி, பஞ்சமம் போனாலே கைதட்டும் சுசீந்திரம்காரர்கள் பேசிக் கொண்டதை இப்படி சுவாரஸ்யமாகக் குறிப்பிடுகிறார்.

ராஜரத்தினம் பிள்ளை அடிக்கடி வெள்ளி டம்ளரில் ‘ஏதோ’ குடிப்பதைப் பார்த்துவிட்டு, இப்படி சொல்வார்களாம். ‘அன்னா அந்த பிளாஸ்கிலெருந்து, வெள்ளி தம்ளர் வளியா உள்ளெ போகுல்லா, அதுதான் தோடியாட்டும், காம்போதியாட்டும், கல்யாணியாட்டும் வெளீல வருது’.

ஒரு மனிதர் செத்துப் போனதற்குப் பிறகு அவரை ‘இந்திரன் சந்திரன்’ என்றுதான் எழுத வேண்டும் என்கிற அசட்டுசம்பிரதாயத்தை மீறி, உள்ளது உள்ளபடியே எழுதப்பட்டிருக்கிற ‘சுப்புடு’ பற்றிய கட்டுரை ஒன்றும் இந்தப் புத்தகத்தில் உள்ளது. ஆனால் அதைப் படிக்கும் ‘சுப்புடு அபிமானிகள்’ யாருக்கும் வருத்தம் வராதவண்ணமே கட்டுரை அமைந்திருப்பதை, அதை முடித்திருக்கும் விதம் நமக்கு சொல்கிறது.

‘ஜவஹர்லால் நேரு இவரு தோள்ல கைபோட்டாராம்லா! நல்லா கத விடுதாருவே, பாட்டையா’ என்றுதான் ‘நான் பார்த்த ரோஜாவின் ராஜா’ கட்டுரையைப் படித்தபோது நினைக்கத் தோன்றியது. ஆனால் பெரியவர் வெங்கட் சாமிநாதன் தன்னுடைய அணிந்துரையில் (அது அணிந்துரைதானே?) ‘ராஜீவ் காந்தியாவது, ஷேக் ஹசீனாவாவது, மனுஷன் அளக்கிறார் என்று தோன்றலாம். இல்லை, அவர் சொன்னவற்றில் சொல்லாமல் விட்டதும் நிறைய உண்டு’ என்கிறார். உண்மைதான். பாட்டையா நேரில் சொன்ன, எழுத்தில் சொல்லாமல் விட்ட பல விஷயங்களை அறிவேன். அதையெல்லாம் அவர் எழுதினால், இணையத்தில் பாய்கிற 66A மாதிரி, வேறேதாவது A,Bயில் தொடங்கி Z வரை அவர் மீது பிரியமாகப் பாய்ந்துத் தழுவக்கூடும். நானும் புழலுக்கோ, பாளையங்கோட்டைக்கோ ஆரஞ்சுப் பழம் வாங்கிக் கொண்டு போய்ப் பார்க்க வேண்டியதிருக்கும். அப்போதும் கூட, பாட்டையா ‘மசால்வடய எங்கல, காணோம்?’ என்று கோபித்தாலும் கோபிப்பார்.

இந்தத் தொகுப்பில் உள்ள ‘நான் வாழ்ந்த திருவாங்கூர் சமஸ்தானம்’ கட்டுரையை நாஞ்சில் நாடன் சித்தப்பா உட்பட பல பெரியவர்கள் வரலாற்று ரீதியான பல பதிவுகளைக் கொண்ட மிக முக்கியமான கட்டுரை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். நம் ஊர் மதிய உணவுத் திட்டத்துக்குத் தாத்தாவான(அப்படித்தான் கட்டுரையில் சொல்கிறார்) Vanchi poor fundஇன் கஞ்சியும், சம்மந்தியுமான இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது திருவிதாங்கூர்தான் என்னும் செய்தியில் தொடங்கி, இன்னும் எத்தனையோ இந்தக் கட்டுரையில் அறிந்து கொள்ள முடிகிறது. கொள்கை மாறுபாடுடைய நேருவைப் போன்றவர்களே மதிக்கும் அளவுக்கு ஆங்கிலப்புலமை கொண்ட Sir C.P. ராமசாமி ஐயரின் மார்பிள் சிலை, கிளர்ச்சியின்போது தரையில் கோலமாவாகச் சிதறியிருந்ததைக் கண்ணால் பார்க்க முடிகிறது. மலையாளிகளின் Personal hygeineஉம், பத்மநாபசுவாமி கோயிலைச் சுற்றி மலிந்திருக்கிற ‘யானைக்கால்’ வியாதியும், ‘பெரிய பை’ வியாதியும், கூடவே புத்தக ஆசிரியர் நாவாப் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் ஆசனம் கற்றுக் கொண்டதையும் சுவாரஸ்யமாக நமக்கு சொல்கிறது, இந்தக் கட்டுரை.

இந்தப் புத்தகத்தில் ‘செம்மீனும் தேசிய விருதுகளும்’ கட்டுரையைப் படித்தால் பாட்டையாவை வியக்காதவர்களே இருக்க முடியாது. தில்லி பிலிம் சொஸைட்டியில் தான் பார்த்த உலக சினிமாக்களைப் பற்றி விவரமாகச் சொல்லிகொண்டே கட்டுரையைத் துவக்கும் அவர், ஒருகட்டத்தில், அதாவது ஐந்தாவது பக்கத்தில்தான் போனால் போகிறது என்று கட்டுரையின் தலைப்புக்குள் வருகிறார். தேசிய திரைப்பட விருதுக்கான தேர்வுக் கமிட்டி எந்த லட்சணத்தில் இயங்குகிறது என்பதைப் படம் போட்டுக் காட்டும் இந்தக் கட்டுரையில் நடிகர் திலகம், ’வாத்தியார்’ பாலுமகேந்திராவை அறிமுகப்படுத்திய ராமு காரியாட் போன்றவர்கள் சர்வசாதாரணமாக வந்து போகிறார்கள். அகில இந்திய அளவில் புகழ் பெற்ற தகழியின் ‘செம்மீன்’ திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைப்பதற்கு பாட்டையா முக்கிய காரணம் என்று சொன்னால் நம்புகிற மாதிரியா இருக்கிறது? ஆனால் தில்லி விஞ்ஞான பவனில் விருது விழாவின் போது, பாட்டையாவின் கைகளைப் பிடித்து, ‘வளரே நந்நி, வளரே நந்நி’ என்று சொல்லி கண்களில் ஒற்றி, மேடையில் தனக்குப் போட்ட மாலையை, பாட்டையாவின் கழுத்தில் போட்டு ராமு காரியாட் மகிழ்ந்ததைப் படித்தபின் நம்பாமல் எப்படி இருப்பதாம்?

பாட்டையாவுக்கு நாக்கு நாப்பது முழம் நீளம் என்று நான் எனது ‘பந்தி’ கட்டுரையில் எழுதியிருந்தேன். அதற்குக் காரணமான ஒரு கட்டுரை, ’தில்லியில் தென்னிந்திய ஹோட்டல்களும் கையேந்தி பவன்களும்.’ சிறுவயதில் திருநவேலியின் ‘விஞ்சை விலாஸ்’ இட்லி சாம்பாரும், இப்போது சென்னையில் சாலிகிராமத்து ‘திருநெல்வேலி சைவாள் ஹோட்டல்’ எண்ணெய் தோசையும் சாப்பிடும் என்னைப் போன்ற எச்சிக்கலை சைவனை, மேலும் எச்சிக்கலையாக்கும் இந்தக் கட்டுரையை நான் எத்தனை முறை படித்தேன் என்று கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. கனாட்பிளேஸ் மதராஸ் ஹோட்டல் சட்னி வெறும் பொட்டுக்கடலையாலேயே தயாரிக்கப்பட்டிருக்குமாம். சிறுவயதில் சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது , தலைக்குத் தேய்த்த கடலைமாவு வாயில் வழிந்தால் என்ன ருசியோ அதே ருசிதான் மதராஸ் ஹோட்டல் சட்னிக்கும் என்கிறார், பாட்டையா. மனுஷனுக்கு என்ன ரசனை, பாருங்கள்!

மொரார்ஜி தேசாயின் புதல்வரான காந்திபாய் தேசாய் பற்றிய கட்டுரையான ‘தலைவர்களும், தனயர்களும்’ மற்றுமோர் வியக்க வைக்கும் முக்கியமான கட்டுரை. அந்தக் கட்டுரையில் இப்படி சொல்கிறார். ”Frankfurt Airport சிறிய சுத்தமான நகரம் போல் இருக்கும். Sex shopகளில் உடம்பில் பொட்டுத்துணியில்லாமல் , போனால் போகிறதென்று காலுக்கு செருப்பு மட்டும் போட்டுக் கொண்டு நடமாடும் பெண்களை ஓரிரு தடவைகளுக்குப் பார்க்க காணமுடியாது. இலைமறைவு காய்மறைவுதானே நமக்குத் தெரியும்?”. இவ்வளவு நன்னூலாகச் சொல்லும் ‘பாட்டையா’ இதே கட்டுரையில் ஒரு சமஸ்கிருதப் பாடலுக்கு விளக்கம் சொல்லியிருப்பதைப் படித்துப் பாருங்கள். ‘பாட்டையா’ எப்பேர்ப்பட்ட ஆசாமி என்பது என்பது உங்களுக்குப் புரியும். நானே கூட அதைச் சொல்லிவிடுவேன். ஒருவேளை லேடீஸ் இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தால்? கூச்சமாக உள்ளது. புத்தகத்திலேயே படித்துக் கொள்ளுங்கள்.



இந்தியன் ரயில்வேயைக் குறை கூறுபவர்கள் சிவன்கோயிலில் விளக்கணைத்த பாவத்துக்கு ஆளாவார்கள். இப்படி துவங்குகிறது, ‘ஒரு நீண்ட பயணம்’ கட்டுரை. ரயிலைப் பிடிக்காத, ரயில் பயணத்தை விரும்பாத மனிதர்கள் ஒருவேளை இருக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரையைப் பிடிக்காதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. நிலா, கடல், யானை வரிசையில் ரயிலையும் சேர்க்கும் பாட்டையா, ரயில் பிரயாணத்தை மிகவும் நேசிக்கிறார். முடிந்தால் லண்டனுக்கும் ரயிலில் போகத் தயார் என்கிறார். தில்லியிலிருந்து தில்லியிலிருந்து சென்னை வரைக்கும் ப்ராட்கேஜில் ஓடும் ஜி.டி.எக்ஸ்பிரஸ்ஸிலும், பிறகு சென்னையிலிருந்து நெல்லை வரை மீட்டர்கேஜில் டின்னவேலி எக்ஸ்பிரஸ்ஸிலும், பிறகு ரிட்டர்னாகவும் கட்டுரை முழுதும் நம்மை ரயிலில் அழைத்துச் செல்கிறார். ஐம்பதுகளில் தில்லியிலிருந்து சென்னைக்கு கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்ஸும், ஜனதா எக்ஸ்பிரஸ்ஸும்தான் ஓடிக் கொண்டிருந்தனவாம். ஆனால் பயணிகள் ‘போன ஜென்மத்தின் பிரும்மஹத்தி தோஷம் இருந்தாலொழிய ஜி.டி எக்ஸ்பிரஸ்ஸையே விரும்புவார்களாம். காரணம், ஜனதா எப்போது சென்னை வந்து சேருமென்று அப்போதைய ரயில்வே மந்திரி ஜகஜீவன்ராமுக்கே தெரியாதாம். வழியில் எந்த பிளட்ஃபாரத்தைப் பார்த்தாலும் உடனே நிற்க வேண்டுமென்ற தணியாத ஆசை ஜனதா எக்ஸ்பிரஸ்ஸுக்கு உண்டாம். குறுக்கே ஒரு எருமைமாடு போனாலும், அதற்கு வழிவிட்டபிறகே தொடருமாம்’. நாகர்கோவில் கொலஸ்ட்ரால் இது.

திருநவேலி இருட்டு லாலா கடை ஹரி சிங் மாமாவைத் தவிர வேறெந்த சிங்கையும் அறியாத என்னைப்போன்றவர்க்கு, சிங் என்றாலே முட்டாள் சர்தார்ஜி ஜோக்குகளில் காணப்படுபவர்கள்தாம். இப்போது தில்லியில் இருப்பவரைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் ’சிங் இஸ் கிங்’ படித்த பிறகு அவர்களை வணங்கத் தோன்றுகிறது. சீக்கியர்களைப் பற்றி கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள பல செய்திகள் உள்ளன. குறிப்பாக ’பிச்சையெடுக்கும் ஒரு சர்தார்ஜியை நான் பார்த்ததில்லை. கைகால் இல்லாதவர் கூட தில்லி கோடையின் போது, ஒரு மரத்தடியில் பெரிய மண்பானையில் குளிர்ந்த நீரும், குடிக்க ஒரு பெரிய குவளையும் வைத்திருப்பார். தண்ணீர் குடித்துவிட்டு முன்னால் விரித்த கைக்குட்டையில், உங்களுக்குப் பிரியமிருந்தால் முடிந்ததைப் போடலாம். ஆனால் சர்தார்ஜி கைநீட்டி கேட்கமாட்டார்கள்’ என்று கட்டுரையில் சொல்கிறார், பாட்டையா. பஞ்சாபிகளின் புத்திசாலித்தனத்துக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த பரிசுதான் இன்று பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது என்கிற ரகசியம் சொல்கிறார். விருந்தாளிகளுக்கு ஒன்றரை லிட்டர் பிடிக்கும் பெரிய லோட்டாவில் அவர்கள் கொடுக்கும் லஸ்ஸி, மில்கா சிங் பேசும் சுத்தமான தமிழ் வசவு வார்த்தைகள், பாட்டையா வீட்டுக்கு ஷிவாஸ் ரீகல் சாப்பிட வரும் குஷ்வந்த்சிங் என இவர்கள் அனைவரைப் பற்றியும் ஒற்றவரியில் இப்படி சொல்கிறார், பாட்டையா. ‘வயிற்றில் பல் இல்லாதவர்கள்’.

இவை போக சுஜாதா, பூர்ணம் விசுவநாதன் ஆகியோருக்கான அஞ்சலிக் கட்டுரைகள், மற்றும் நாஞ்சில் நாடன் சித்தப்பா வெகுவாக வியக்கும் ‘பங்களாதேஷ் நினைவுகள்’. அந்தக் கட்டுரையை பல சமூக, அரசியல் கேள்விகளை உள்ளடக்கியிருப்பது என்கிறார். உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் தகவல்கள் அடங்கியுள்ள கட்டுரை, அது. ’பூர்ணம்’ விசுவநாதனுக்கு பூர்வீகம் ‘திருநவேலி’ என்னும் செய்தியை ‘பாட்டையா’ சொல்லித்தான் அறிந்தேன். நிறைய வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறார். பாபி பேதி(பேடி அல்ல), கான் (கேன்ஸ் அல்ல), லாலு (லல்லு அல்ல). ஸ்வ்யீட் (ஸூட்டு அல்ல- suite).

ஒட்டுமொத்தப் புத்தகமும் ‘பாரதி மணி’ என்னும் தனிமனிதர், அவர்தம் வாழ்க்கையில் பார்த்த, பழகிய மனிதர்களைப் பற்றியதுதான். ஆக, எல்லாக் கட்டுரைகளிலும் பாட்டையா இருக்கிறார். ஆனால் ஒரே ஒரு கட்டுரையில்தான் அவர் நிறைந்து நிற்கிறார். கண் கலங்க அண்ணாந்து பார்த்து வணங்க வைக்கிறார். அது, ‘தில்லி நிகம்போத் சுடுகாடு’ என்னும் கட்டுரை. இந்தக் கட்டுரையைப் பற்றி ஒரு வார்த்தையைக் கூட இந்த இடத்தில் நான் சொல்ல விரும்பவில்லை. படிக்காதவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். படித்தவர்கள் எப்படியும் மீண்டும் மீண்டும் படிப்பார்கள்.

‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தைப் பற்றி அ. முத்துலிங்கம், அசோகமித்ரனில் தொடங்கி ‘பாட்டையா’ பாரதி மணி வரை எத்தனையோ பேர் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கட்டுரையை நானாகத்தான் எழுதுகிறேன். ’எல, நானும் ரெண் . . . .டு, மூ . . . .ணு வருசமா சொல்லிக்கிட்டே இருக்கென். ஒளுங்கா, மரியாதயா என் பொஸ்தகத்த பாராட்டி எளுதுதியா? இல்ல, ஒன்ன வாரியலக் கொண்டு அடிக்கட்டுமா?’ என்று என்னை மிரட்டி எழுதச் சொன்னவர் ‘பாட்டையா’ இல்லை. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

Thursday, December 6, 2012

தேவனின் கோயில்

'கதாநாயகியோட அம்மாவா நடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு நடிகைகளேதானே வளச்சு வளச்சு நடிக்காங்க! சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு அம்மாவத் தேடிப் புடிச்சு நடிக்க வச்சா என்ன?’ இந்த விபரீத ஆசை யின் தேடலில் ஒரு பெண்மணியின் புகைப்படம் கிடைத்தது. அச்சு அசலான நடுத்தரத் தமிழ்க்குடும்பத்து பெண்மணி. மதுரை மாவட்டத்தின் ஏதோ ஓர் பள்ளியின் ஆசிரியை.

‘நடிக்க வருவாங்களாப்பா?’

‘அவங்க ஹஸ்பண்டுக்கிட்ட பேசச் சொன்னாங்க, ஸார்.’

உதவி இயக்குனர் சொன்னார்.

‘அதுக்கென்ன? பேசிட்டா போச்சு. நம்பர் இருக்கா?’

‘இருக்கு ஸார்’.

‘குடு. பேசலாம்.’

‘னைன், எய்ட், த்ரீ, டூ . .’

‘என்ன பண்றாராம், ஸாரு?’

‘போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸார்’.

‘வடிவுக்கரசியம்மா டேட்ஸ் இருக்கான்னு செக் பண்ணுங்களென்’.

நொடிப்பொழுதில் முடிவை மாற்றினேன். ஆனால் தற்செயலாக பெயர் தெரியாத அந்த டீச்சரம்மாவின் வீடியோவைப் பார்க்க நேர்ந்தது. Staff roomஇல் சக டீச்சர்களின் கேலிச் சிரிப்பொலிகளுக்கிடையே, ‘டீச்சர் நல்லா பாடுவாங்க ஸார்’ என்ற குரலைத் தொடர்ந்து, ‘கொஞ்சம் அமைதியாத்தான் இருங்களென்’ என்று யாரோ சொல்கிறார்கள். முகம் முழுதும் பெருகிய வெட்கத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, கூச்சம் விலகாமல், தலை கவிழ்ந்தபடி, மேஜையில் கைகளை ஊன்றியபடி அந்த டீச்சர் பாட ஆரம்பிக்கிறார், ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே’. அவர் பாட ஆரம்பித்த அந்த நொடியில் என் மனம் கலங்க ஆரம்பித்தது. ஆனால் பாட்டு போகப் போக டீச்சரின் கூச்சம் மறைந்து அந்தப் பாடலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்தார். முகத்தில் அத்தனை துலக்கம். . ‘நானொரு சோக சுமைதாங்கி’ என்று சரணத்தைத் தொடங்கும் போது குரலில் அத்தனை உருக்கம். தலையைக் குனிந்தவாறே பாடியபடி ’மறந்தாதால்தானே நிம் . . . .மதி’ என்று முடித்துவிட்டு, வலிய வரவழைத்த சிரிப்புடன் நிமிர்ந்தார். ’டீச்சர் நல்லா பாடுவாங்க ஸார்’ என்று சொன்னவுடன், அவர் ஏன் இந்தப் பாடலைப் பாடினார்? இந்தப் பாடலைத் தவிர வேறெந்தப் பாடலைப் பாடியிருந்தாலும், அது இந்தளவுக்கு நம்மைக் கவர்ந்திருக்குமா என்று மனதுக்குள் பல கேள்விகள்.

folder

‘அறுவடை நாள்’ திரைப்படத்தின் ‘தேவனின் கோயில்’ பாடல், வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது என்று சொன்னால் அது கொஞ்சமும் மிகையில்லை. நானாக அந்தப் பாடலைக் கேட்பது போக, டீச்சரைப் போல யாராவது ஒருவர் தேவனின் கோயிலுக்குள் இழுத்துச் சென்று விடுவர். சிலசமயங்களில் காரணமேயில்லாமல் சில பாடல்கள், நாள் முழுதும் நம் மனதைச் சுற்றி வருவது போல , ஒருநாள் ‘தேவனின் கோயில்’ பாடலைத் தொடர்ந்து நாள்முழுக்க முணுமுணுத்துக் கொண்டேயிருந்தேன். சொல்லிவைத்தாற்போல நண்பர் விக்கி, நெதெர்லேண்ட்ஸிலிருந்து ஃபோனில் அழைத்தார்.

‘சுகா, குருவி சேக்குற மாரி துட்டு சேத்து, குட்டியானை கணக்கா ஒரு பியானோ வாங்கியிருக்கென்’.

‘வாசிக்க ஆரம்பிச்சுட்டீங்களா, விக்கி?’.

‘பொறவு? அதே சோலிதானெ!’.

‘தேவனின் கோயில் வாசிச்சு பாருங்க’ .

சிலநொடிகள் மௌனம். ‘விக்கி, விக்கி. லைன் கட் ஆயிட்டா?’

‘என்ன சுகா இது அநியாயம்? அந்தப் பாட்டப் பத்திப் பேசத்தானெ ஒங்களக் கூப்பிட்டென். ரைட் ஹேண்ட் நோட்ஸ்லாம் ப்ராக்டிஸ் பன்ணிட்டென். லெஃப்ட் ஹேண்ட்ல பாஸ் கிதார் நோட்ஸ்தான் கைய ஒடிக்கி. எப்படியும் இன்னும் ஒரு மாசத்துல் வாசிச்சிருவ்வேன்னுதான் நெனைக்கென்’.

என்னைப் போலவே திருநவேலிக்காரரான விக்கி, வயலினும், பியானோவும் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர். ’தேவனின் கோயில்’ பாடலின் பாஸ்கிதார் பகுதிகளை ஒரு மாதத்தில் வாசித்து விடுவேன் என்று விக்கி சொன்னதில் அர்த்தமில்லாமலில்லை. பொதுவாகவே இளையராஜாவின் பாடல்களின் ஆதார அஸ்திவாரமே, பாஸ்கிதார்தான். ஒட்டுமொத்தப் பாடலின் கட்டுமானத்தையும் தாங்கிப் பிடிக்கும் பாஸ்கிதாரின் அற்புதமான வாசிப்பை ‘தேவனின் கோயில்’ பாடல் முழுவதும் நாம் கேட்கலாம். சினிமா பாட்டு கேட்பது தெய்வக்குற்றம் என்கிற அளவுக்கு கொள்கைப்பிடிப்புடைய கிறிஸ்டோஃபர் ஸார்வாள் தனது கிதார் பயிற்சியின் போது ‘தேவனின் கோயில்’ பாடலின் கிதார் பகுதிகளை, ரகசியமாக ரசித்து வாசித்ததை ஒருமுறை பார்த்திருக்கிறேன்.

திருநவேலியின் லாலா சத்திர முக்கில் இருக்கும் ‘சதன் டீ ஸ்டாலில்’ அதிகாலை நேரத்தில் நடிகர் திலகத்தின் குரலுடன் ‘அறுவடை நாள்’ பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். சிவாஜி ஃபிலிம்ஸின் தயாரிப்பு, அது. ‘ப்ரேமம் ப்ரேமாதி ப்ரேமப்ரியம் ப்ரேமவஸ்யப்ரேமம்’ என்று இளையராஜாவின் குரலில் அந்தப் பாடல் துவங்கும் போதே கணேசண்ணனின் கண்கள் கலங்கத் துவங்கும். சொல்லியிருந்த ’விவா டீ’ கைக்கு வரவும், கொஞ்சமும் கூச்சப்படாமல் தரையில் உட்கார்ந்து பாடலைக் கேட்க ஆரம்பிப்பான். பாட்டு முடிந்த பிறகுதான் கண்களைத் திறப்பான். ‘அண்ணாச்சி, இன்னொரு மட்டம் இந்தப் பாட்ட போடுங்களென்’ என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டு, என்னிடம் ‘தம்பி, இன்னொரு விவா டீ சொல்லென்’ என்பான். சதன் டீக்கடைக்காரர் கணேசனுக்கு மட்டும் ‘விவா டீ’க்கு பதிலாக, வேறேதும் ஊனா பானா கொடுத்துவிட்டாரோ என்று சந்தேகிக்கும் வண்ணம் பாடல் முடிந்ததும் கணேசண்ணன் பிதற்ற ஆரம்பிப்பான்.

‘இந்தப் பாட்ட எளுதுனவன், பாடுனவ, எசையமைச்சவன் எல்லாரயும் சுட்டுக் கொல்லணும்டெ. துஷ்டி வீட்டுக்கு வந்த மாரில்லா சவம் அளுக அளுகயா வருது. இன்னொரு மட்டம் கேட்டென்னா மூச்சு முட்டி செத்தே பெயிருவென்’.

ஆனாலும் அன்று மாலையே, ‘சதனுக்குப் போவோமா? தேவனின் கோயில் கேட்டுட்டு வருவோம்’ என்பான்.

கணேசண்ணன் சொன்னது போல, தேவனின் கோயில் பாடலோடு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரது பங்களிப்பும் அந்தப் பாடலை எங்கோ உயரத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. சித்ராவின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கை ‘தேவனின் கோயில்’ பாடல் ஆற்றியிருக்கிறது. மிக சன்னமான தொனியில் இந்தப் பாடலைப் பாடத் துவங்கும் அவர், இரண்டாவது சரணம் முடியும் இடமான ‘நானோர் கண்ணீர்க் காதலி’ என்னும் போது குரல் உடைந்து, அதேசமயம் ஸ்ருதிவிலகாமல் பாடி, கேட்பவரைக் கலங்க வைக்கிறார். அந்த சமயத்தில் முழுமையாக தமிழைப் புரிந்து கொண்டு பாடக்கூடியவராக சித்ரா இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ‘நானொரு சோக சுமைதாங்கி’ என்ற வரியிலும், ’கேட்டால் தருவேன் என்றவன் நீயே, கேட்டேன் ஒன்று தந்தாயா’ என்ற வரியிலும் அவரது குரலிலுள்ள உணர்ச்சியை கவனித்தால், ‘யாருப்பா சொன்னா அது மலையாளத்துப் பிள்ளன்னு? அது நயம் தமிளச்சில்லா’ என்று அடித்துச் சொல்லி விடலாம்.

ilayaraja_yesudas_chithra_fazil

இதுபோல ‘வாடி என் கப்பக்கிழங்கே’ பாடலாசிரியராகவே அதிகமாக அடையாளம் காட்டப்பட்டுவரும் கங்கை அமரனின் மிக முக்கியமான பாடல்களில் ஒன்று ‘தேவனின் கோயில்’. கன்னியாஸ்திரியாக மாறுவதற்கான பயிற்சியில் உள்ள ஒரு பெண் காதல்வயப்படுகிறாள். காதலனுடன் இணைய முடியவில்லை. இதை பாடலின் முதல் வரியிலேயே எவ்வளவு எளிமையாகச் சொல்லிவிடுகிறார்! ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே!’. காதலனுடன் இணைய முடியாத காதலியை, ‘பிரிந்தே வாழும் நதிக்கரை போல, தனித்தே வாழும் நாயகி’ என்கிறார், கங்கை அமரன். துக்கத்தின் விளிம்பில் நின்று அவள் தன்னைப் பற்றி ’ஒருவழிப்பாதை என் பயணம்’ என்று பாடியபடியே, ’இணைவது எல்லாம் பிரிவதற்காக, இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக, மறந்தால்தானே நிம்மதி’ விரக்தியின் உச்சத்தைச் சொல்கிறார்.

‘தேவனின் கோயில்’ பாடலின் இசையமைப்பை எடுத்துக் கொண்டால் அதன் மெட்டைச் சொல்வதா, வாத்தியங்களின் அமைப்பைச் சொல்வதா, அதன் தாளத்தைச் சொல்வதா, எதைச் சொல்வது என்று புரியவில்லை. மிக எளிமையாகச் சொல்வதாக இருந்தால் இது ஒரு சோகப்பாடல். ஆனால் பாடலின் துவக்கத்தைக் கேட்டால் ‘ப்ரேமம் ப்ரேமாதி’ என நவீனமான முறையில் பல்குரல் பதிவாக இளையராஜாவின் குரல் கேட்கிறது. பிறகு சித்ரா ’தேவனின் கோயில்’ எனத் துவங்கும் போதே நம் மனம் கனக்கத் துவங்குகிறது. ’இங்கு என் ஜீவன் தேயுதே’ என்னும் வரியில் தேயு . .தே என்கிற ஒரு வார்த்தையில், பின்னால் வர இருக்கும் இசை பூகம்பத்தை நமக்கு சொல்லாமல் உணர்த்திவிடுகிறார், இளையராஜா. பல்லவி முழுதும் தாளம் ஏதுமில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலின் முதல் இடையிசை (First interlude) தேவாலய மணியின் ஓசையுடன் துவங்கும் போதே, படம் பார்க்காமலேயே நம் கண்கள் முன்னால் காட்சி விரிகிறது. ‘அறுவடை நாள்’ திரைப்படத்தில் வரும் தேவாலயம், பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி வளாகத்திலுள்ள மிகப் பிரமாண்டமான தேவாலயம். ஒவ்வொரு முறை அந்தப் பக்கம் செல்லும் போதெல்லாம், அந்த தேவனின் கோயிலை சிலமணித்துளிகள் நின்று பார்ப்பது என் வழக்கம். ‘இதயெல்லாம் பாக்காமலயெ அந்த மனுஷன் எப்பிடித்தான் அப்பிடி ஒரு பாட்டு போட்டாரோ’ என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.

இப்படி ஒரு சோகப்பாடலுக்கு இளையராஜா அமைத்திருக்கும் தாளம், சற்றே துள்ளலானது. வழக்கமாக சோகரசம் தொனிக்கும் பாடலென்றால் பண்டிட் பாலேஷுக்கு ஃபோன் செய்து, ‘செவன் டூ ஒன் வந்திருங்க பாலேஷ்ஜி’ என்று ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து சொல்லி விடுவார்கள். அவரும் சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து கிளம்பும் போதே தானும் மூக்கைச் சிந்தி, தன் ஷெனாயுக்கும் மூக்கைச் சிந்தச் செய்து கைக்குட்டையால் துடைத்து, அழைத்துச் செல்வார். ‘பாலேஷ்ஜி, ஒரு நாலு பார் ஹைபிட்ச்ல வாசிச்சு ஃபில் பண்ணிருங்க’ என்பார்கள். ஆனால் ‘தேவனின் கோயில்’ பாடலில் ஷெனாய்க்கு வேலையில்லை. இது போன்ற சோக கீதங்களில் கிட்டத்தட்ட ஷெனாயின் வேலையைச் செவ்வனே செய்திடும் புல்லாங்குழலும் நவீனமாகக் கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்விரு வாத்தியங்களின் வேலையையும் இந்தப் பாடலில் கிதார் எடுத்துக் கொள்கிறது. முதல் இடையிசையின் முடிவில் ’நானொரு சோக சுமைதாங்கி’ என்று பாடலின் மிக முக்கியமான பகுதியை சித்ரா துவக்குவதற்கு வசதியாக ’இந்தா புடிச்சுக்கோ, மகளே’ என்று தளம் அமைத்துக் கொடுக்கிறது, கிதார். பாடலின் துவக்கத்தில் பலகுரல்களாக ஒலித்த இளையராஜாவின் குரல், இரண்டாவது இடையிசையில் தெம்மாங்காக உச்சஸ்தாயியில் உற்சாகமாக ஒலிக்கிறது. ஆனால் எந்த வகையிலும் அந்த துள்ளலொலி பாடலின் மைய உருவைக் குலைக்கவில்லை. இது போன்ற நம்ப முடியாத இசை ஆச்சரியங்களெல்லாம் இளையராஜாவிடம் மட்டுமே சாத்தியம்.

ஒருநாள் திரைப்பட இயக்குனரும், நடிகருமான நண்பர் அழகம்பெருமாள் சொன்னார்.

‘வே, அத ஏன் கேக்கேரு? ராத்திரி சரக்கப் போட்டுட்டு ஒளுங்கா மரியாதயா செவனேன்னு கட்டய சாத்துறத விட்டுட்டு தேவனின் கோயில் பாட்டக் கேக்கலாமாய்யா? சவம் காலச் சுத்துன பாம்பா விடிய விடிய கொன்னு எடுத்துட்டுல்லா. படுக்கும் போது மணி என்னங்கேரு? காலைல எட்டர. ஒரு சினிமாப் பாட்டு இப்பிடியாவே மனச அறுக்கும். ச்ச்சை’.

கணேசண்ணன், கிறிஸ்டோஃபர் ஸார்வாள், பெயர் தெரியாத அந்த டீச்சர், சகோதரர் விக்கி, நண்பர் அழகம்பெருமாள் என யாராவது ஒருவர் அவ்வப்போது என்னை ‘தேவனின் கோயில்’ பாடலுக்குள் இழுத்துச் சென்று விட்டு விடுவார்கள். நானும் கொஞ்ச நாட்களுக்கு அதற்குள்ளேயே கிடப்பேன். கடந்த ஒருவாரகாலமாக ‘தேவனின் கோயில்’ பாடலை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த முறை, இப்படி ஒரு கட்டுரை எழுதிவிடும் அளவுக்கு என்னை ‘தேவனின் கோயிலுக்குள்’ கொண்டு போய் விட்டு, கதற வைத்தது யார் என்று தீவிரமாக யோசித்து, சற்று சிரமப்பட்டே விடையைக் கண்டுபிடித்தேன். அது வேறு யாருமல்ல. நானேதான்.


Monday, November 12, 2012

மூத்தோர்

‘வணக்கம். நான் தி.க.சி பேசுதென். இவ்வளவு நாளா எங்கெய்யா இருந்தேரு! பிரமாதமா எளுத வருது, ஒமக்கு. விட்டுராதேரும்’. சாகித்ய அகாடெமி விருது பெற்ற தமிழ் இலக்கியத்தின் மூத்த விமர்சகர் தி.க.சிவசங்கரன் அவர்கள், தொலைபேசியில் அழைத்துப் பேசிய அந்த சமயத்தில் நான் ஒன்றும் பெரிதாக எழுதியிருக்கவில்லை. ‘வார்த்தை’ சிற்றிதழில் ஒன்றிரண்டு கட்டுரைகள் வந்திருந்தன, அவ்வளவுதான். அவரது வார்த்தைகளில் கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனேன். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அச்சில் வெளிவந்த என் எழுத்துக்கான முதல் எதிர்வினை அது. அதற்குப் பிறகு மாதாமாதம் ஃபோன் வரும். அப்போது ‘வார்த்தை’ மாத இதழாக வந்து கொண்டிருந்தது. ‘இதெல்லாம் புஸ்தகமா வரணும்யா’. ஒருநாள் சொன்னார். நான் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வில்லை. சில மாதங்களில் ‘தாயார் சன்னதி’ என்னும் பெயரில் புத்தகமாக என்னுடைய கட்டுரைத் தொகுப்பு உருவான போது, என்னை விட அதிகமாக சந்தோஷப்பட்டவர், தி.க.சி. தாத்தா.




[தி.க.சி]

‘புஸ்தகம் வந்தாச்சு. சந்தோஷம். ஆனா நீரு ஃபிக்ஷன் எளுதணும். அதுவும் விகடன் மாதிரி பத்திரிக்கைல. பல பேருக்குப் போயி சேரணும்’ என்றார். பெரியவரின் வாக்கு பலித்தது. ‘ஆனந்த விகடன்’ பத்திரிக்கையில் நான் எழுதிய ‘நாகு பிள்ளை’ என்ற சிறுகதை வெளிவந்த போது, நண்பர் ஜெயமோகன் அது சிறுகதையே அல்ல என்றார். வண்ணதாசன் அண்ணாச்சியும் ‘சிறுகதைக்கு இன்னும் ஏதோ ஒன்று வேண்டும்’ என்னும் பொருள்பட அபிப்ராயம் சொன்னார். நான் வழக்கம்போல, எழுதி முடித்தபின் வேறு யாரோவாக இருந்தேன். ஆனால் தி.க.சி தாத்தாவின் ஃபோன் ஒரு புது செய்தி சொல்லியது.

‘யோவ் பேரப்பிள்ள, என்னய்யா விகடன்ல இப்பிடி பண்ணிட்டேரு?’

‘ஆமா தாத்தா. சரியா வரல.’

‘யாருய்யா சொன்னா, சரியா வரலென்னு? ஒரு நாவல அடக்கி, சுருக்கி, குறுக்கி எளுதிட்டேரேன்னு நான் வருத்தப்பட்டுக்கிட்டிருக்கென்’.

நான்கூட ஏதோ நம்மை உற்சாகப்படுத்த சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அந்த சிறுகதையின் ஒவ்வொரு கதாபாத்திரங்களாக எடுத்துரைத்து, கதையின் எந்தெந்த பகுதிகளை நீட்டினால் அது நாவலாக உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பதை பொறுமையாக எடுத்துச் சொன்னார். ‘அத்தன கிளைக்கதைகள் அதுல ஒளிஞ்சிக்கிட்டிருக்குயா’ என்றார்.

அதோடு விடாமல் இன்னொன்றும் சொன்னார். ‘வேணா பாரும். இந்த கத ஒமக்கு பல கதவுகள தொறக்கப் போகுது. இனிமெ நீரு தப்பவே முடியாது. ஒம்மக்கிட்டெ இருக்குற சரக்குக்கு நீரெல்லாம் விகடன்ல தொடரே எளுதலாம்யா’.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. ஆனால் பிற்பாடு அதுவும் நடந்தது. ‘மூங்கில் மூச்சு’ தொடர் எழுத ஆரம்பித்த புதிதில், தி.க.சி தாத்தா ஒரு விஷயம் சொன்னார். ‘பொதுவா இப்படி எளுதுங்க, அப்படி எளுதுங்கன்னு யாருக்கும் நாம சொல்லக் கூடாது. அத எளுதுறவந்தான் தீர்மானிக்கணும். ஆனா ஒங்களுக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லுதென். தனிநபர் தாக்குதல் வேண்டாம். என்னா?’ என்றார். மறுப்பேதும் சொல்லாமல், ‘சரி தாத்தா’ என்றேன். வாராவாரம் விகடன் வரும்போது கொண்டாடுவார். ‘ஒலகத்துல இருக்கிற திருநவேலிக்காரன்லாம் ஒம்மப் பாத்தாத் தூக்கிட்டே போயிருவான், பேரப்பிள்ள. பத்திரமா இரியும்’. சொல்லிவிட்டு சத்தமாகச் சிரிப்பார்.

ஒருகட்டத்துக்கு மேல் தி.க.சி தாத்தாவுக்கும், எனக்குமான உறவு ஆழமாகி இன்றுவரை தரைதட்டாமல் மேலும் மேலும் உள்ளே இறங்கிப் போய்க் கொண்டே இருக்கிறது. திருநவெலிக்கு நான் சென்றால் முதல் வேலையாக அம்மன் சன்னதியிலிருந்து, சுடலைமாடன் கோயில் தெருவுக்கு ஓடுவேன். வளவு சேர்ந்த, பழைய சுண்ணாம்பு வீட்டில் தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கும் தி.க.சி.தாத்தாவைப் போய்ப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை. மாலையில் எழுத்தாளர் நாறும்பூநாதனைச் சந்திக்கும்போது, எடுத்த உடனேயே, ‘தி.க.சி ஐயாவ பாத்துட்டேள்லா?’ என்று கேட்பார். நான் பதில் சொல்வதற்குள், கவிஞர் க்ருஷி, ‘என்ன தம்பி கேள்வி இது? வண்டி மொதல்ல அங்கெதானெ போகும்? அப்பொறந்தானெ நாமல்லாம்?’ என்பார். பொதுவாக நான் திருநவேலிக்கு வரும் செய்தியை தி.க.சி தாத்தாவை கண்ணும் கருத்துமாக உடனிருந்து கவனித்து வரும் தம்பிகள், ‘ஓவியர்’ பொன் வள்ளிநாயகமோ, பொன்னையனோ சொல்லிவைத்து விடுவார்கள். தாத்தாவைப் பார்க்கக் கிளம்பிச் சென்றுக்கொண்டிருக்கும் போதே வேகத்தடை போல குறுக்கே மறித்து, சந்திப்பிள்ளையார் முக்கில் பொன்னையன் சொல்லுவான். ‘தாத்தா முந்தாநாளெ சொல்லியாச்சுல்லா, நீங்க வாரியென்னு. பேரப்பிள்ளக்கு ஆயிரம் ஜோலி இருக்கும். நேரம் இருந்தா, என்னைய வந்து எட்டிப் பாக்கச் சொல்லுங்க. ஆனா, நான் பாக்கணும்னு பிரியப்பட்டேன்னு சொல்ல மறந்துராதீங்கன்னு சொன்னா’.




என் காலடிச் சத்தம் கேட்டவுடனேயே, உற்றுப் பார்த்துப் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தையோ, செய்தித் தாளையோ மடக்கி வைத்து விட்டு ‘வாங்கய்யா. ரயில் ப்ரயாணம் சௌக்யமா இருந்துதா?’ என்று சத்தமாகச் சிரித்தபடியே கேட்பார். பிறகு உள்ளே எழுந்து போய் பல்செட்டையும், சட்டையும் மாட்டிக் கொண்டு வந்து, உட்கார்ந்து நிதானமாகப் பேச ஆரம்பிப்பார். அநேகமாக முதல் கேள்வி இப்படித்தான் இருக்கும்.

‘இப்ப ரீஸண்டா என்ன எளுதுனேரு?’

ஒவ்வொன்றாக, ஒவ்வொருவராகக் கேட்பார். பெரும்பாலும் எழுத்தாளர்களைப் பற்றிய விசாரிப்புகள்தான்.

‘ஜெயமோகன் சினிமால எளுதுதாரெ? சினிமாக்காரங்க ஒளுங்கா துட்டு கிட்டு குடுக்காங்களா?’

‘நாஞ்சில் நாடன எப்பப் பாத்தாலும் என் விசாரிப்புகளச் சொல்லும்’.

‘அறிவுமதியப் பாக்கறதுண்டா? நீங்கல்லாம் ஒரே ஸ்கூல்தானெய்யா? அவரு நமக்கு நல்ல நண்பர். விசாரிச்சதா சொல்லுங்க’.

‘பாட்டையா பாரதி மணி எப்பிடியா இருக்காரு? மனுஷன் தொடர்ந்து எளுத மாட்டெங்காரே?’
இதற்கு மட்டும் நான் குறுக்கிட்டு, ‘அது சவம் துன்பம்லா?’ என்பேன். வெடித்து சிரிப்பார். ‘தொடர்ந்து அந்த மனுசன என்னா மாரி கேலி பண்ணி எளுதுதேரு! அதுவும் அந்த ‘வலி’ கட்டுர! அவருக்கும் ஒம்ம மேல அவ்வளவு பிரியம்! சுகா சுகான்னு பாசமா இருக்காரெ!’

‘ஜெயகாந்தன் ஒங்கள விசாரிச்சாரு, தாத்தா’ என்பேன். பொங்கி வரும் மகிழ்ச்சியுடன், ‘அவரையெல்லாம் அப்பப்ப போயி பாருங்கய்யா’ என்பார். அதே போல தி.க.சி தாத்தா அடிக்கடி என்னைப் போய்ப் பார்க்கச் சொல்லும் கலைஞர் ஒருவர் இருக்கிறார்.

‘திருநவெலிக்கு வந்தாலெ நெல்லையப்பரப் பாக்க ஓடுதேருல்லா! அந்த மாரி சென்னைல அந்த மனுசனையும் போயி அடிக்கடி பாத்து ஒரு கும்பிடு போடும். பல நூற்றாண்டுகளுக்கு ஒரு மட்டம்தான் அந்த மாதிரி கலைஞர்களெல்லாம் நம்ம மண்ணுல தோன்றுவாங்க’ என்பார். அந்த ‘கலைஞர்’ இளையராஜா.

எழுத்துலகில் நாம் அறியாத பல வரலாற்று சிறப்புகளை தி.க.சி தாத்தா மூலம் தெரிந்து கொள்ளலாம்.

‘மூக்கப்பிள்ளன்னு ஒரு நாவல் எளுதப் போறென்னு புதுமைப்பித்தன் சொல்லிக்கிட்டெ இருந்தாரு. கடசிவரைக்கும் எளுதல’. வருத்தமாகச் சொல்வார்.

வாழ்ந்து, பழுத்த அனுபவஸ்தரான தி.க.சி தாத்தாவிடம் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கையின் அடிப்படை விஷயங்கள் எத்தனையோ உள்ளன. அவ்வப்போது என்னுடைய கட்டுரைகளில் இடம்பெறும் மீனாட்சிசுந்தரத்தை, என்னுடைய கட்டுரைகள் வாயிலாகத்தான் தி.க.சி தாத்தாவுக்கு அறிமுகம். என்னையும் விட வயதில் இளைய மீனாட்சி சுந்தரம், இப்போது தி.க.சி தாத்தாவுக்கு நெருக்கமான நண்பன். ‘மீனாட்சி சுந்தரம். ஒம்மப் பத்தி ஒங்க சித்தப்பா மூங்கில் மூச்சுல எளுதியிருக்காரெய்யா?’ என்று தி.க.சி தாத்தா உற்சாகமாகக் கேட்கும் போதுகூட, அருகில் கிடக்கும் ஆனந்த விகடனை ஏறெடுத்தும் பார்க்காத அளவுக்கு தீவிர வாசகன், எனது மகன் முறையான மீனாட்சி சுந்தரம். ஆனாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாமல் தி.க.சி தாத்தாவுடன் மீனாட்சியைப் பார்க்கலாம். அதற்குக் காரணம் தி.க.சி. தாத்தா தன் நண்பனிடம் காட்டும் பரிவுதான். சமீபத்தில் மீனாட்சியின் தாயார் காலமான செய்தி வந்த போது, மாநகர நெருக்கடி வாழ்க்கையின் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் வண்ணம், குறுஞ்செய்தியிலேயே அனுதாபித்து வேறுவேலை பார்க்கச் சென்று விட்டேன். ஆனால், தன்னுடைய தள்ளாத வயதிலும் தி.க.சி தாத்தா மீனாட்சியின் இல்லம் தேடிச் சென்றிருக்கிறார்.

‘தொணைக்கு வள்ளியக் கூட்டிக்கிட்டு ஒரு ஆட்டோ புடிச்சு தாத்தா வந்துட்டா, சித்தப்பா. சொல்லச் சொல்லக் கேக்காம, மச்சுப்படி ஏறி வந்து, அத ஏன் கேக்கிய?’ ஊருக்குப் போயிருக்கும் போது, கலங்கிய குரலில் மீனாட்சி சொன்னான்.

வழக்கமாக தி.க.சி தாத்தாவைப் பார்க்கப் போகும் போது அவர் படித்துக் கொண்டிருந்தால் அருகில் சென்று, ‘தாத்தா’ என்பேன். எழுதிக் கொண்டிருந்தாரானால், அவர் எழுதி முடிக்கும் வரையிலும் சற்றுத் தள்ளியே நின்று கொள்வேன். அப்படி ஒருமுறை, வாசலில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த தாத்தா நிமிர்ந்து பார்க்கும் வரை, அந்த பெரிய வளவு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். கடிதம் எழுதிக் கொண்டிருந்தார் என்பது தெரிந்தது.




எழுதி முடித்து, பேனாவை மூடி, ஸ்டூலை நகர்த்தி, கையில் எழுதிய கடிதத்துடன் தாத்தா நிமிர்ந்து பார்த்தவுடன் சத்தமாக ‘வாங்கய்யா’ என்று சிரித்தார், வழக்கம் போல. ஆனால் கண்கள் கலங்கியிருந்தன. பல்செட்டை மாட்டிக் கொண்டு வந்து அமர்ந்து பேச ஆரம்பித்தார்.

‘கணவதி எறந்து போனத விசாரிச்சு, கி.ராஜநாராயணன் லெட்டர் போட்டிருந்தாரு. வளக்கமா ஒடனெ பதில் போட்டிருவென். இதுக்கு மட்டும் முடியாமப் போச்சு. அதான் பதில் எளுதிக்கிட்டிருந்தென். ரொம்ப நேரமா உக்காந்திருந்தேரா?’

கணபதி அண்ணன், தி.க.சி தாத்தாவின் புதல்வர். வண்ணதாசன் அண்ணாச்சியின் மூத்த சகோதரர்.

படிக்காமலோ, எழுதாமலோ சும்மா உட்கார்ந்திருந்த தி.க.சி தாத்தாவை நான் பார்த்ததே இல்லை. எல்லா பத்திரிக்கைக்கும் தன்னுடைய அபிப்ராயங்களை எழுதுவது அவரது வழக்கம். இதுபற்றி அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வந்த பின்னும் அவர் அதை பொருட்படுத்தாமல் தனது கடமையாக, பத்திரிக்கைகளுக்கு எழுதவதை இன்னும் செய்து வருகிறார்.

‘பேரப்பிள்ள, எளுதுறதுங்கறது எல்லாருக்கும் வராது, கேட்டேரா? எளுதுறதுன்னா சும்மா பேப்பர்ல பேரெளுதி பாக்கானெ! அவன் இல்ல. எளுதரவங்கள நாம பாராட்டுனா, மேலும் அவங்க நல்லா எளுதுவாங்க. அதே மாரிதான் பத்திரிக்க நடத்துறதும். அரசாங்கம் நடத்துறத விட செரமமான காரியம். அவங்களயல்லாம் தொடர்ந்து நாம ஊக்குவிக்கணும்’.

அதனால்தானோ என்னவோ, எழுத்தாளராகக் குறிப்பிடும்போது ’வண்ணதாசன் இதப் பத்தி எளுதியிருக்காரெ’ என்றும், மகனாகச் சொல்லும் போது, ‘கல்யாணி ஏற்கனவெ சொன்னானெய்யா’ என்றும் இயல்பாகச் சொல்ல அவரால் முடிகிறது.
எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என்றில்லை. அரசியல் தலைவர்களும் சுடலைமாடன் கோயில் தெருவுக்கு வந்து, தி.க.சி தாத்தாவுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். அவ்வப்போது வைகோ மாமா வருவார். அந்த மாதிரி சமயங்களில் தாத்தாவுடன் இருக்கும் வள்ளிநாயகம் சொல்லுவான்.

‘எண்ணே, அத ஏன் கேக்கிய? அன்னைக்கு சொல்லாம கொள்ளாம திடுதிடுப்னு நல்லகண்ணு ஐயா வந்து நிக்கா. தாத்தா கூட உக்கார வச்சுட்டு, நான் அந்தாக்ல காப்பி ஏற்பாடு பண்ணப் போனென். அவாள் என்னடான்னா நீத்தன்ணிதான் வேணும்னுட்டா. தாத்தாவும் ஒடனெ ஒங்க அம்மைக்கிட்டெ வாங்கிக் கொண்டாந்து குடுங்கய்யான்னுட்டா. ஒரு சொம்பு நெறய நீத்தண்ணி குடிச்சதுக்கப்புறம் அவாளுக்கு குளுந்துட்டு. அதப் பாத்து தாத்தாக்கு ஒரே சந்தோசம்’.

திருநவேலிக்கு அடிக்கடி செல்ல முடியாமல் போனாலும் தி.க.சி தாத்தாவிடம் அவ்வப்போது ஃபோனில் பேசாமல் இருப்பதில்லை.

‘தாத்தா, சும்ம இருக்கேளா?’

‘நல்லா இருக்கென் பேரப்பிள்ள. மதுரல ஒரு பாராட்டு விளா. என்னமாரி கருப்பந்துறைக்குக் காத்திருக்கிற கெளடுகட்டகளயா பொறக்கியெடுத்து விருது குடுக்காங்க’. கொஞ்சமும் அசராத குரலில் சொல்லிவிட்டு சிரிப்பார்.

‘நமக்கு விருப்பமில்லென்னாலும் நண்பர்களுக்காக செல விஷயங்கள நாம செஞ்சுதான் ஆகணும். அந்த எடத்துல நட்பு மட்டும்தான் கண்ணுக்குத் தெரியணும்’.

நண்பர்களிடம் காட்டும் பரிவையும், அன்பையும் கருத்து ரீதியாக தன்னை மறுப்பவர்களிடத்திலும் தி.க.சி தாத்தா கொண்டிருக்கிறார். ஒருநாள் தற்செயலாக பெரியவர் வெங்கட் சாமிநாதன் பற்றிய பேச்சு வந்தது. சற்று நேரம் அமைதியாக இருந்தார். இலக்கிய உலகில் தி.க.சியும், வெங்கட் சாமிநாதனும் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கையில் கிடைத்ததைக் கொண்டெல்லாம் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளுமளவுக்கு கணவன், மனைவி போல அவ்வளவு அந்நியோன்யமானவர்கள். சிறிது நேர அமைதிக்குப் பின், ‘பேரப்பிள்ள, ஒங்களுக்கு அவரு அறிமுகமா?’ என்றார்.

‘பேசிப் பளக்கமில்ல தாத்தா. ஆனா இணையத்துல, நம்மள நாமளெ பாராட்டிக்கறதுக்கும், மத்தவங்கள ஏசறதுக்கும் Facebookனு ஒரு சமாச்சாரம் இருக்கு. அதுல நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்’ என்றேன்.

‘Facebook தெரியும்யா. சமூக இணைய தளம்தானெ? விகடன்லதான் வருதெ? சாமிநாதன்கிட்டெ பேசுனா ஒண்ணு சொல்லணுமெ?’

தி.க.சி தாத்தாவை கடுமையாக விமர்சித்து எழுதிய, எழுதுகிற, எழுத இருக்கிறவரிடம் என்ன செய்தியைச் சொல்ல இருக்கிறாரோ என்ற கலக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல், ‘சொல்லுங்க தாத்தா’ என்றேன். ‘அவரு மனைவியும் காலமான பெறகு பெங்களூர்ல தனியா உக்காந்து என்ன செய்யுதாரு? இங்கன ஒத்தக்காட்டுக் கொரங்கா நானும் தனியாத்தானெய்யா இருக்கென்? இங்கெ வந்து ஒரு வாரம், பத்து நாளு எங்கூட இருக்கச் சொல்லுங்கய்யா’ என்றார்.

உடனே பதில் சொல்லத் தெரியாமல் திணறினேன். ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் தி.க.சி தாத்தா இல்லை. அவர் மனம் எங்கோ சென்று கொண்டிருந்ததை அவரது முகம் காட்டியது.

‘என்னா மனுசன்யா அவரெல்லாம்? கருத்து ரீதியா நாங்க ரெண்டு பேரும் எதிர் எதிரானவங்கதான். எல்லாத்தயும் தாண்டி மனுசனுக்கு மனுசந்தானெ முக்கியம். அதத்தானெ எல்லா இலக்கியமும் சொல்லுது! தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக்காரு!’

நான் குறுக்கிடாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.

சட்டென்று என் முகம் பார்த்து, ‘ஐயா, இங்கெ வந்து என் கூட கொஞ்ச நாளு இருந்துட்டு போயி, ‘தி.க.சி ஒரு முட்டாள்னு எளுதட்டுமெ! அதுக்காகவாது வெங்கட் சாமிநாதன் இங்கெ வரலாம்லா! என்ன சொல்லுதேரு?’.

சொல்லிவிட்டு, சத்தமாக தனது வழக்கமான சிரிப்பைச் சிரித்தார்.

சென்னைக்கு வந்தவுடன் ஒருநாள் பெரியவர் வெங்கட் சாமிநாதனுக்கு Facebook வழியாக தகவல் சொன்னேன். எனது தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டவர், மறுநாள் அழைத்தார்.




[வெங்கட் சாமிநாதன்]

‘தி.க.சி தாத்தா ஒங்கள விசாரிச்சார் ஸார்’ என்றேன். சன்னமான குரலில், ‘திட்டினாரா?’ என்றார். ‘இல்ல ஸார். ஒங்கள திருநவேலிக்குக் கூப்பிடறார். அவரோட வந்து தங்கணுமாம்’ மேலும் விவரங்கள் சொன்னேன். எதிர்முனையில் இருக்கிறாரா என்று சந்தேகிக்கும் அளவுக்கு கனத்த மௌனம் நிலவியது. ‘ஸார்’ என்றேன். ‘சுகா, நாளைக்கு என்னை கூப்பிடறேரா?’ என்றார். பொதுவாகவே மூத்தோர் சொல்லை மதிக்கும் நான், பெரியவர் வெங்கட் சாமிநாதன் சொன்னபடி மறுநாளே அவரை அழைக்க மறந்து, இரண்டு தினங்கள் கழித்து அழைத்தேன்.

‘என்னய்யா இது, மறுநாளே கூப்பிடுவேருன்னு நெனச்சேன்’.

‘ஸாரி ஸார். வேலைகள்ல சிக்கிக்கிட்டென்’.

‘பரவாயில்ல. அப்புறம் தி.க.சி விஷயம் சொன்னீரே!’

‘ஆமா ஸார். நான் என்ன சொல்லணும்னு சொல்லுங்க’.

‘இல்ல. எனக்கு ஒரே ஒரு விஷயம் தெரிஞ்சுக்கிட்டா நல்லது. அத மட்டும் விசாரிச்சு சொல்ல முடியுமா?’

தி.க.சி தாத்தா அளவுக்கு எனக்கு ‘பெரியவர்’ வெங்கட் சாமிநாதன் பழக்கமில்லை. அவருடைய கறாரான எழுத்து மட்டுமே பரிச்சயம். இன்னும் நேரில் சந்தித்ததில்லை. ஃபோனில் பேசியதோடு சரி. என்ன கேட்கப் போகிறாரோ என்று யோசித்தபடியே, சற்று தயக்கத்துடன் ‘சொல்லுங்க ஸார்’ என்றேன்.

‘ஒண்ணுமில்ல. தி.க.சி வீட்ல டாய்லட் வெஸ்டெர்ன் ஸ்டைலா, இண்டியன் ஸ்டைலா?’ என்று கேட்டார், ‘பெரியவர்’ வெங்கட் சாமிநாதன்.

புகைப்படங்கள் : சுகா, சேதுபதி அருணாசலம்.